'உலகத் தலைவர்' மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இப்படி அழைத்தது உண்மையா?
அமெரிக்கா: அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை உலகத் தலைவர் என்று அழைத்ததாக வெளியான ட்வீட் ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக கடந்த 20ம் தேதி பதவியேற்ற பிறகு ஜோ பைடன் ஆற்றிய உரை அமெரிக்க மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவர் தனது உரையில், "பல மாகாணங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவாக நான் பார்ப்பேன். உங்கள் நம்பிக்கையைப் பெற முழு மனதாக பணியாற்றுவேன். அமெரிக்கா என்பது மக்களை குறித்தது. நான் இந்த பதவிக்கு வந்ததற்குக் காரணம், அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், இந்த நாட்டின் முதுகெலும்பான நடுத்தர வர்க்க மக்களை மறுகட்டமைக்கவும், மீண்டும் அமெரிக்காவை அனைவரும் மதிக்கும்படியும், நாட்டில் ஒற்றுமையை உருவாக்கவும்தான். எனது இந்த நோக்கத்திற்காக பலர் வாக்களித்துள்ளது குறித்து தான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். தற்போது, கடமையாற்றுவதற்கான நேரமும் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் புதிய அதிபருக்கு உலகத்தின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
குறிப்பாக, இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டரில், இருநாட்டு உறவை வலுப்படுத்த பைடனுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாகவும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை பேணிக்காக்க ஒன்றுமையுடன் செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டு ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இதேபோல் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுக்கொண்ட கமலா ஹாரிஸ்க்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்றும் இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்கு கமலா ஹாரிசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எல்லாம் நல்லாத் தானே போயிட்டிருக்கு... அப்புறம் என்ன-வென்று உங்கள் மனதில் எழும் கேள்வி எனக்கும் கேட்கிறது. இருங்க விஷயத்துக்கு வரேன்...
ஜோ பைடன் ட்விட்டர் கணக்கில் இருந்து மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிப்பது போல் வெளியான பதில் ட்வீட் ஒன்று சமூக தளங்களில் படுவைரலானது.
அதில், 'வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவருக்கு நன்றி' என்று ஜோ பைடன் ரிப்ளை செய்தது போல் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. உடனே, அமெரிக்க அதிபரே பிரதமர் மோடியை உலகத் தலைவர் என அழைத்துவிட்டார் என்று, ஏகத்துக்கும் அந்த ட்வீட் ரீட்வீட் செய்யப்பட்டது.
மோடி தெரிவித்த வாழ்த்து பிடித்து செய்தாரா, இல்லை பிடிக்காமல் அந்த டீவீட்டுக்கு சொந்தக்காரர் இப்படி செய்தாரா என்று தெரியவில்லை... ஆனால், ட்வீட் மட்டும் வைரலானது.
ஆனால், உண்மையில் அந்த ட்விட்டர் ஹேண்டில் ஜோ பைடனுக்கு சொந்தமான வெரிஃபைட் ஹேண்டில் கிடையாது. தவிர, தற்போது அந்த குறிப்பிட்ட ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.