தப்பினார் டிரம்ப்... போதிய வாக்குகள் இல்லாததால் கண்டன தீர்மானம் தோல்வி
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை தொடர்பான கண்டன தீர்மானத்தில் போதிய வாக்குகள் கிடைக்காததால் டிரம்ப் இதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றதாகத் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். தேர்தலை மாற்ற அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும், எதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி பைடன் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோது, டிரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற கட்டடத்தின் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கண்டன தீர்மானம்
இதையடுத்து, டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் ஜனவரி 13ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த சிலரும் டிரம்பிற்கு எதிராக வாக்களித்தனர். அதற்குள் புதிய அதிபராக ஜோ பைடன், கடந்த 20ஆம் தேதி பதவியேற்றார். இதன் காரணமாக செனட் சபையில் டிரம்பின் கண்டன தீர்மானம் குறித்து விசாரிக்கக் காலதாமதம் ஏற்பட்டது.
புதிய வீடியோக்கள்
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் டிரம்ப் மீதான கண்டன தீர்மானத்தின் மீதான விசாரணை தொடங்கியது. அப்போது, டிரம்ப் தூண்டுதலாலேயே கடந்த ஜனவரி 6ஆம் தேதி வன்முறை ஏற்பட்டதாக ஜனநாயகக் கட்சி எம்பிகள் தெரிவித்தனர். மேலும், நாடாளுமன்ற வன்முறை தொடர்பாக புதிய வீடியோக்களையும் வெளியிட்டனர். அதில் வன்முறையாளர்களால் அமெரிக்க எம்பிகள் எப்படி ஆபத்தான சூழ்நிலையில் தள்ளப்பட்டனர் என்பதை விளக்கும் வகையிலிருந்தது.
சரி இல்லை
இருப்பினும், டிரம்ப் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் நாடாளுமன்ற வன்முறைக்கும் டிரம்பிற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் தாமாக வன்முறையில் ஈடுபட்டதாகவும் அதற்கும் டிரம்பிற்கும் தொடர்பு இல்லை என்றும் அவர்கள் கூறினர். மேலும், தற்போது அதிபர் பதவியில் இல்லாத ஒருவர் மீது கண்டன தீர்மானத்தை எடுத்து வருவது சரியான வழிமுறை இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தீர்மானம் தோல்வி
இதையடுத்து நடைபெற்ற வாக்குப்பதிவில் டிரம்பிற்கு எதிராக 57 வாக்குகளும் ஆதரவாக 43 வாக்குகளும் பதிவானது. டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஏழு பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும், இந்த தீர்மானம் வெற்றிபெறச் சபையிலுள்ள 2/3 பங்கு உறுப்பினர்கள், அதாவது 63 பேரின் ஆதரவு தேவை என்பதால் இந்த தீர்மானம் வெற்றி பெறவில்லை.
மீண்டும் தேர்தலில் போட்டி?
இதனால் டிரம்ப் தரப்பு மிகவும் நிம்மதி அடைந்ததுள்ளது. மேலும், இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம்முடைய அமெரிக்க வரலாற்றில் தற்போது மிகவும் மோசமான காலகட்டம் நடைபெறுகிறது. அமெரிக்காவைச் சிறந்த நாடாக மீண்டும் உருவாக்கும் நமது பணி இப்போது தான் தொடங்குகிறது. நமக்கு 7.5 கோடி மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பதை யாரும் மறந்துவிட மாட்டார்கள்" என்று அவர் கூறியுள்ளார். மீண்டும் வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதையே டிரம்ப் இப்படி சூசகமாகத் தெரிவித்துள்ளார் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.