எனது நண்பருக்கு சீன வைரஸ்.. டிரம்பின் குசும்பை பாருங்க!.. உலக போர் போல் நீளும் சீனா- அமெரிக்கா ஃபைட்
வாஷிங்டன்: அமெரிக்காவும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் கொரோனாவை சீன வைரஸ் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் உறுப்பினரும் தனது நண்பருமான ராண்ட் பாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறியுள்ள ட்வீட்டில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 400 பேர் பலியாகிவிட்டனர். 32 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏய் கொரோனா.. மக்களை டர்ர்ர் ஆக்குகிறாயா?..
வீடுகள்
இதில் பாதிக்கு மேற்பட்ட 15,168 பேர் நியூயார்க்கை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து ஏராளமானோர் வீடுகளிலேயே முடங்கிவுள்ளனர். இந்த நிலையில் புளோரிடாவில் ஒரு ரிசார்ட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் அவருடன் டிரம்ப் நெருங்கி பழகியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து டிரம்பிற்கு கொரோனா வைரஸ் நோய் இருக்கிறதா என சோதிக்கப்பட்டது.
சீனா குற்றச்சாட்டு
இதில் அவருக்கு கொரோனா இல்லை என வந்தது. இதனிடையே அண்மைக்காலமாக சீனாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. சீனாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர்தான் கொரோனா வைரஸை பரப்பிவிட்டார்கள் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றம்சாட்டினார்.
சீனா மறைத்துவிட்டது
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கொரோனா சீனாவின் வைரஸ் என டிரம்ப் பேசியிருந்தார். மேலும் இன்னொரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப் கொரோனா வைரஸ் பரவுவதை முன்கூட்டியே சீனா தெரிவித்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் சீனா மறைத்துவிட்டது. இது பெரும் தவறு.
சீன வைரஸ்
சீனா செய்த தவறுக்காக உலக நாடுகள் பெரும் விலை கொடுத்து வருகின்றன என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் கொரோனாவை சீன வைரஸ் என்றே டிரம்ப் கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டரில் எனது நண்பரும் செனட் உறுப்பினருமான ராண்ட் பாலுக்கு சீன வைரஸ் இருப்பது உறுதியாகிவிட்டது. இது நல்லதல்ல. அவர் வலிமையாக இருக்கிறார். இப்போதுதான் அவரிடம் பேசினேன் என டிரம்ப் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.