என் ட்வீட்டர் கணக்கையா க்ளோஸ் பண்ணீங்க, உங்களையே என்ன பண்றேன் பாருங்க... கடும் கோபத்தில் டிரம்ப்
வாஷிங்டன்: கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இருப்பினும் அதிபர் டிரம்ப் பைடனின் வெற்றியைத் தடுக்க கடைசி வரை பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.
பைடனின் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒன்று கூடியபோதும், அதைத் தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமெரிக்க நாடாளுமன்ற கட்டத்தில் புகுந்த டிரம்பின் ஆதரவாளர்கள் செய்த வன்முறையில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.
பதவி காலம் முடிவதற்குள்... அணு ஆயுத தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமா? அதிர்ச்சி தகவல்கள்!
டிரம்பின் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
இதைத்தொடர்ந்து தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் கருத்துகளை வெளியிட்டு வருவதாகக் கூறி டிரம்பின் ட்விட்டர் கணக்கையும் அவரது பிரச்சார அணியின் டிவிட்டர் கணக்கையும் ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. அதேபோல அவரது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.
கோபத்தில் டிரம்ப்
தனது கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதால் ட்விட்டர் நிறுவனத்தின் மீது அதிபர் டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார். இந்தச் சந்திரப்பத்தை பயன்படுத்தி, பழமைவாத கருத்துகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும் டெக் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிரம்பின் ஆலோசகர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். "இது அதிபர் டிரம்ப்பைப் பற்றியது மட்டுமல்ல. இது 7.5 கோடி அமெரிக்கர்களின் உரிமை சார்ந்தது" என்றும் டிரம்ப் ஆலோசகர் கூறினார்.
நடவடிக்கை நிச்சயம்
பழமைவாதிகளுக்கு எதிராக டெக் நிறுவனங்கள் நடந்துகொள்வதாகப் பல குடியரசு கட்சி எம்பிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது குறித்து டிரம்ப் ஆலோசகர் மேலும் கூறுகையில் "மிகப் பெரிய டெக் நிறுவனங்களும் ஜனநாயகக் கட்சி எம்பிகளும் இணைந்து குடியரசுக் கட்சியின் கருத்துகளை ஒடுக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்" என்றார். டிரம்ப்பின் சமூகவலைத்தள கணக்குகளும் தற்போது முடக்கப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்கள் மீது டிரம்ப் நடவடிக்கை எடுக்கச் சரியான நேரமாக இது பார்க்கப்படுகிறது.
சட்டப்பிரிவு 230
அமெரிக்காவில் மிகப் பெரிய டெக் நிறுவனங்கள் சட்டப்பிரிவு 230இன் மூலமே பாதுகாக்கப்படுகிறது. இச்சட்டத்தின்படி சமூக வலைத்தளங்கள் என்பவை கருத்துகளை வெளியிடும் ஒரு தளமே ஆகும், கருத்துகளை வெளியிடும் நபர் அல்ல. எனவே, யாரோ ஒருவர் வெளியிடும் கருத்துகளுக்காக டெக் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. அதேபோல தங்கள் தளங்களில் மோசமான பதிவுகள் இருக்கிறது என்று டெக் நிறுவனங்கள் கருதும்பட்சத்தில், அதை நீக்கவும் அந்நிறுவனங்களுக்கு அதிகாரம் உள்ளது.
சட்டத்தை காலி செய்யும் டிரம்ப்
இந்தச் சட்டப்பிரிவு டெக் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பலத்தை அளிப்பதாக அமெரிக்காவில் பலரும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். சட்டப்பிரிவு 230 உள்ளதால் டெக் நிறுவனங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனவே, டெக் நிறுவனங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கும் டிரம்ப் இச்சட்டப் பிரிவை நீக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ பைடன் நிலைப்பாடு
அடுத்த அதிபராகும் ஜோ பைடனும் சட்டப்பிரிவு 230ஐ நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளார். எனவே, அதிபர் டிரம்ப் தனது கடைசிக் காலத்தில் இச்சட்டத்தை நீக்க உத்தரவு பிறப்பித்தால், அது டெக் நிறுவனங்களுக்கு வரும் காலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.