பதவி போனாலும் திமிரு மட்டும் போகல.. டிரம்பின் பிடிவாதத்தால்.. வழக்கறிஞர் குழுவிலிருந்து பலர் விலகல்
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் குறித்து விசாரணை இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், அவரது வழக்கறிஞர் குழுவிலிருந்து பலர் விலகியுள்ளனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபராக இருந்த டிரம்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். கடைசி வரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தலில் பெரியளவில் மோசடி நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, அலுவலர்களை மிரட்டுவது, தனக்குச் சாதகமான ஆட்கள் மூலம் பைடன் வெற்றியைத் தள்ளி வைக்க முயல்வது எனத் தொடர்ந்து பல முயற்சிகளையும் எடுத்தார். இருப்பினும், எதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அமெரிக்கக் கலவரம்
இந்நிலையில், ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு கடந்த ஜனவரி 6ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வெளியே போராடிக் கொண்டிருந்த டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று, நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இரண்டு காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் இது கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது. டிரம்பின் தூண்டுதலாலேயே இந்த வன்முறை நடைபெற்றதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர்.
டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்
இதையடுத்து கடந்த ஜனவரி 13ஆம் தேதி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், டிரம்ப் தற்போது அதிபர் பதவியில் இல்லை என்பதாலும் புதிய அதிபர் பைடன் இதில் ஆரவம் காட்டவில்லை என்பதாலும் பதவிநீக்க தீர்மானம் மேல் சபையில் விசாரணை செய்யப்படாமலேயே போகலாம் என்று தகவல் பரவியது. இருப்பினும், மேல் சபை சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட சிலர் இதில் உறுதியாக இருந்ததால் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி டிரம்பின் பதவி நீக்க தீர்மானம் மேல் சபையில் விசாரணை செய்யப்படவுள்ளது.
கருத்துவேறுபாடு
இந்நிலையில், டிரம்பின் வழக்கறிஞர் குழுவிலிருந்து பல முக்கிய வழக்கறிஞர்களும் விலகியுள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேல் சபை விசாரணையின்போது, பதவியில் இல்லாத நபர் மீது பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வர முடியாது என்பதை முன்வைத்து வாதாடலாம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதை ஒப்புக்கொள்ளாமல், தொடர்ந்து தேர்தல் குறித்த தனது ஆதாரமற்ற பொய்களைக் கொண்டே வாதாட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்துள்ளார்.
5 பேர் விலகல்
இதனால் இரு தரப்பிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. டிரம்ப் தரப்பை தலைமை தாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐந்து வழக்கறிஞர்கள் விலகியுள்ளனர். டிரம்பின் வழக்கறிஞர் குழுவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் இருப்பினும், எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் டிரம்பின் ஆலோசகர் ஜெசன் மில்லர் தெரிவித்தார்.
குடியரசு கட்சி காப்பாற்றுமா?
இரண்டாவது பதவி நீக்க விசாரணையை எதிர்கொள்ளும் டிரம்ப் தனது வழக்கறிஞர் குழுவை செட் செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும், டிரம்பின் குடியரசு கட்சியினர் அவருக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100 உறுப்பினர்களைக் கொண்ட மேல் சபையில் தற்போது இரு கட்சிகளும் 50 பேர் உள்ளனர், டிரம்பின் பதவி நீக்கத்திற்கு 2/3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. அதாவது சுமார் 13 குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இதற்குத் தேவை. ஆனால் குடியரசு கட்சியினர் டிரம்பிற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.