விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வழக்கு.. வேகமெடுக்கும் விசாரணை.. பெரும் சிக்கலில் டிரம்ப்
வாஷிங்டன்: டிரம்ப் தற்போது அமெரிக்க அதிபர் பதவியில் இல்லை என்பதால் அவர் மீதான பாலியல் வழக்குகளின் விசாரணை வேகம் எடுத்துள்ளன.
அமெரிக்காவின் 45ஆவது அதிபராக இருந்தவர் டிரம்ப். கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். கடந்த 25ஆண்டுகளில் தேர்தலில் தோற்ற முதல் அதிபர் என்ற மோசமான சோதனையையும் அவர் படைத்தார்.
அதேநேரம் டிரம்ப் அதிபராக இருந்த போதே, திரைப் பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலரும் டிரம்ப் எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அப்படி பெண் எழுத்தாளர் ஜீன் காரோல் தொடர்ந்த வழக்கு விசாரணை தான் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு
டிரம்ப் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஜீன் காரோல் என்ற பெண் எழுத்தாளர் கடந்த 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து நியூயார்க் இதழில் காரோல் எழுதிய கட்டுரையில் கூறுகையில் "இது 1990களில் நடந்தது. அப்போது நான் தொலைக்காட்சி ஒன்றில் டாக் ஷோ நடத்திக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நான் மன்ஹாட்டன் நகரில் ஷாப்பிங் செய்ய சொன்றியிருந்தேன். அப்போது அங்கு டிரம்பை சந்தித்தேன்.
பாலியல் வன்புணர்வு
அப்போது டிரம்ப் என்னை அடையாளம் கண்டுகொண்டார். என்னிடம் சிறிது நேரம் உரையாடினார். தனது தோழி ஒருவருக்கு கிஃப்ட் வாங்க வேண்டும் என்று கூறி என்னை ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு உடை மாற்றும் அறைக்குள் என்னை தள்ளிய டிரம்ப், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார். அப்போதே இது குறித்து எனது இரு நண்பர்களிடம் தெரிவித்தேன். டிரம்பால் எதுவும் செய்துவிட முடியும் என்பதால் அஞ்சி நான் போலீசில் புகார் அளிக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
வேகமெடுக்கும் விசாரணை
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதமே டிரம்ப் மீது ஜீன் காரோல் வழக்கு தொடர்ந்திருந்தார். இருப்பினும், அதிபர் பதவியில் இருப்பதால் வேலைப்பளு காரணமாக வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என டிரம்ப் சார்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். டிரம்ப் அதிபராக இருந்த ஒரே காரணத்தினால் மட்டுமே இந்த வழக்கு விசாரணை தாமதமானது என்றும் இப்போது அவர் அதிபர் பதவியில் இல்லை என்பதால் வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் ஜீன் காரோல் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் மறுப்பு
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை டிரம்ப் முற்றிலுமாக மறுத்துவிட்டார். ஜீன் காரோலை யார் என்றே தெரியாது என்றும் அவரை பார்த்தது கூட இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், தனது புத்தக விற்பனையை அதிகப்படுத்தவே ஜீன் காரோல் இப்படிப் பொய் கூறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இருப்பினும், டிரம்ப் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தபோது அணிந்திருந்த ஆடையைப் பத்திரமாக வைத்துள்ளதாகவும் அதிலுள்ள டிஎன்ஏவை பரிசோதனை செய்து பார்த்தால் யார் சொல்வது பொய் என்பது தெரிந்துவிடும் என்றும் எழுத்தாளர் ஜீன் காரோல் தெரிவித்துள்ளார்.
பல பெண்கள் குற்றச்சாட்டு
அதேபோல டிரம்பின் ரியாலிடி ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்மர் செர்வோஸ் என்பவரும் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இவர்கள் இருவரையும் தவிர 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இருப்பினும், டிரம்ப் தன் மீதான அனைத்து பாலியல் குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுத்துள்ளார். எதிர்க்கட்சியினரின் தூண்டுதலாலேயே இதுபோன்ற பொய் குற்றச்சாடுகள் தன் மீது சுமத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.