அதிபர் பதவியில் கடைசி காலம்... இறுதியாக ஒரு முறை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கிளம்பும் 'அதிபர்' டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட அவரது மனைவி மெலினா டிரம்புடன் வெள்ளை மாளிகையிலிருந்து புளோரிடாவிலுள்ள தனது ரிசார்ட்டிற்கு புறப்பட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அதிபர் டிரம்ப்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் அடுத்த மாதம் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
இன்னும் ஒரு மாசம்தான் நீங்க இருப்பீங்க... அதுக்குள்ள ஒரு முடிவை எடுங்க... டிரம்பிற்கு சவுதி கோரிக்கை
விடுமுறைக்குக் கிளம்பிய டிரம்ப்
இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாள்களே அமெரிக்க அதிபராக டிரம்ப் இருப்பார். இந்நிலையில், டிரம்ப் தனது மனைவி மெலினா கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட வெள்ளை மாளிகையிலிருந்து நேற்று புறப்பட்டார். அவர்கள் இருவரும் புளோரிடா மாகாணத்திலுள்ள டிரம்பின் மார்-எ-லாகோ ரிசார்ட்டில் விடுமுறையைக் கழிக்கவுள்ளனர்.
டிரம்ப்பின் குற்றச்சாட்டு
அதிபர் தேர்தல் குறித்து டிரம்ப் தொடர்ந்து பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துவருகிறார். அதிபர் தேர்தலில் பெரியளவில் மோசடி நடைபெற்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள டிரம்ப், தேர்தல் நேர்மையாக நடைபெற்றிருந்தால் வெற்றி தனதாகவே இருந்திருக்கும் என்றும் கூறி வருகிறார். மேலும், அதிபர் தேர்தல் தொடர்பாக அவர் நீதிமன்றங்களிலும் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.
டிரம்பின் அடாவடி
தேர்தல் முடிவு வெளியானதிலிருந்து புதிய அதிபர் பொறுப்பேற்கும் வரையிலான காலகட்டத்தை டிரான்சிஷன் காலம் என்று அழைப்பார்கள். இந்த காலத்தில் புதிய அதிபர் பொறுப்பேற்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த நடவடிக்கைகளைத் தொடங்க டிரம்ப் சுமார் இரு வாரங்களுக்கு அனுமதியளிக்கவில்லை. அதேபோல கொரோனா பாதிப்பு நிதி குறைவாக இருப்பதாக் கூறி அதில் கையெழுத்திடவும் மறுத்துவிட்டார். மேலும், அமெரிக்காவில் ரஷ்ய ஹேக்கர்கள் மிகப் பெரிய தாக்குதலை சமீபத்தில் நடத்தியுள்ளதாக ராணுவ உயர் அதிகாரிகள் கூறியது குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை. மேலும், அமெரிக்க ராணுவத்திற்குச் செல்லும் நிதியைக் கூட அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுத்திவிட்டார்.
செய்தியாளர்களைச் சந்திக்க மறுக்கும் டிரம்ப்
பொதுவாகச் செய்தியாளர்களைச் சந்திப்பது என்பது டிரம்பிற்கு மிகவும் பிடிக்கும். அங்குச் செய்தியாளர்களை அவமானப்படுத்துவது, அவர்களுடன் சண்டை போடுவது என அந்தச் சந்திப்புகள் மூலம் டிரம்ப் தன்னை ஹீரோவாக முன்னிறுத்திக்கொள்வார். ஆனால், தேர்தல் முடிவு வெளியானதிலிருந்தே டிரம்ப் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்து வருகிறார். கடந்த நவம்பர் 26ஆம் தேதி தேங்க்ஸ் கிவ்விங் டே-இன் போது செய்தியாளர்களைச் சந்தித்ததே கடைசியாகும். கொரோனா பாதிப்பு நிதி தொடர்பான மசோதாவில் தான் கையெழுத்திட மாட்டேன் என்பதைக் கூட அவர் ட்விட்டரில் வீடியோ மூலமே தெரிவித்திருந்தார்.
சொந்த கட்சியினருக்கு எதிராக வேலை செய்யும் டிரம்ப்
டிரம்பின் குடியரசு கட்சியின் பல முக்கிய தலைவர்களும்கூட ஜோ பைடனின் வெற்றியை ஒப்புக்கொண்டனர். ஆனால், டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமைகூட தேர்தலில் மோசடி நடைபெற்றதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், ஜோ பைடனை வாழ்த்திய சொந்த கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பது குறித்து டிரம்ப் சிந்தித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.