கணிப்புகளில் சறுக்கல்...தேர்தல் பிரச்சார மேலாளரை நீக்கினார் ட்ரம்ப்...ஜோவுக்கு சாதகம் ...!!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜோ பைடனுக்கும் குறைவான வெற்றி வாய்ப்பே கிடைத்த காரணத்தால் தனது தேர்தல் பிரச்சார மேலாளரை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீக்கினார். இதுவரை பைடனுக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபருக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. பொதுவாக அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி இரண்டு மட்டுமே களத்தில் நிற்கும். தற்போதும், மீண்டும் அதிபருக்கான களத்தில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் இவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவில் பொதுவாக வெற்றி வாய்ப்புகள் குறித்து பல கட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது ஏறக்குறைய தெரிந்துவிடும். நடப்பாண்டிலும், இதுபோன்ற ஆய்வுகள் பல்வேறு கட்டங்களில் நடந்து வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆய்வில், ஜோ பைடனுக்கு ஆதரவாக 52 புள்ளிகள் கிடைத்துள்ளது. ட்ரம்ப்புக்கு ஆதரவாக 37 புள்ளிகள் கிடைத்துள்ளது. இருவருக்கும் இடையே இருக்கும் புள்ளி வித்தியாசம் 15. பல்வேறு ஆய்வுகளில் பைடன் தான் இதுவரையும் முன்னணியில் இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னிடம் பிரச்சார மேலாளராக இருந்த பிராட் பார்ஸ்கேலை நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு பில் ஸ்டீபியனை கொண்டு வந்துள்ளார். பிரச்சாரத்தை பிராட் சரியாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை நீக்கியதாக கூறப்படுகிறது.
ஒக்லஹோமாவில் நடந்த பிரச்சாரத்தில் 19000 பேர் உட்கார வேண்டிய ஸ்டேடியத்தில் வெறும் 6000 பேர் மட்டுமே வந்துள்ளனர். இது பெரிய அளவில் ட்ரம்ப்புக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. குடியரசுக் கட்சிக்குள் ட்ரம்ப்புக்கு ஆதரவு குறைந்து வருகிறது. முன்பு 94 என்று இருந்த ஆதரவு தற்போது 84 ஆகக் குறைந்துள்ளது. பொருளாதாரம் என்று வரும்போது ட்ரம்ப், பைடன் இடையே பெரிய வித்தியாசம் இல்லை, ட்ரம்ப்புக்கு 45 சதவீத ஆதரவும், பைடனுக்கு 50 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.
அதேசமயம் இக்கட்டான நிலைமையை கையாள்வதில் ட்ரம்ப்புக்கு 38 சதவீத ஆதரவும், பைடனுக்கு 57 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.இதுவே சுகாதாரம் என்று வரும்போது ட்ரம்ப்புக்கு 35 சதவீத ஆதரவும், பைடனுக்கு 58 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. இனப்பாகுபாடு என்று வரும்பட்சத்தில் ட்ரம்ப்புக்கு 62 சதவீத ஆதரவும், பைடனுக்கு 30 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனாவால் 79 பேர் பலி- 4,538 பேருக்கு தொற்று பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா தொற்றை கையாளுவதில் கோட்டை விட்டது, சீனாவுடன் வர்த்தகப் போர், உள்நாட்டு வேலையிழப்பு ஆகியவை ட்ரம்ப்பை நோக்கி சவால்களை உருவாக்கி உள்ளது. ஆனால், இதற்கு மாறாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், ''நம்முடைய வாக்கு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொருளாதாரம் மீண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து விரைவில் வர இருக்கிறது. அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பான தெருக்களும், சமுதாயமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது'' என்று பதிவிட்டு இருந்தார்.
இன்னும் தேர்தலுக்கு நாட்கள் இருக்கிறது என்றாலும், நாளுக்கு நாள் ட்ரம்ப் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பொருளாதாரத்தை மீட்க வேண்டும், வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும், கொரோனவுக்கு தடுப்பு மருந்து கொண்டு வரவேண்டும் போன்ற அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.