டொனால்ட் டிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது கண்டன தீர்மானம்.. அடுத்து என்ன நடக்கும்?
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, செனட் கண்டன தீர்மான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே பதவியிலிருந்து முன்னாள் அதிபர் ஒருவர் மீது கண்டனத் தீர்மானம் நடைபெறுவது இதுதான் முதல் முறையாகும்.
தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து, அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, டொனால்ட் டிரம்ப் மீது பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அது நிறைவேறியது. டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை
அவர் அதிபராக பதவி வகித்த காலத்தில், இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜனவரி 20ம் தேதி ஜோ பைடன் பதவியேற்றார். இந்த தீர்மானம் 14ம் தேதி நிறைவேறியது. அமெரிக்க அதிபர் வரலாற்றில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோதுதான் முதல் முறையாக 2 முறை கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்ற கலவரம் தொடர்பாகவும் முன்னதாக உக்ரைன் தொடர்பான விவகாரத்திலும் என 2 முறை டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் வந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட முடியாது
இப்போது முன்னாள் அதிபர் ஆகிவிட்ட நிலையிலும் அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் செனட்டில் வந்துள்ளது. இது அமெரிக்காவில் முதல் முறையாகும். டொனால்ட் ட்ரம்ப் மீதான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அவர் 2024 ஆம் ஆண்டு மறுபடி அமெரிக்க தேர்தலில் போட்டியிட முடியாது. அரசு தொடர்பான எந்த பதவியிலும் இருக்க முடியாது. எனவே தான் இந்த தீர்மானம் உலகம் முழுக்க உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
செனட் உறுப்பினர்கள் பலம் எப்படி?
அமெரிக்க செனட் சபையில் 100 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 3 பங்கினர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக ஓட்டு போட்டால் கண்டனத் தீர்மானம் நிறைவேறும். ஜனநாயக கட்சியை சேர்ந்த 50 பேர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக இருக்கிறார்கள். இது தவிர டொனால்ட் ட்ரம்ப் கட்சியான ஜனநாயக கட்சியில் இருந்து 17 செனட் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்கு போட்டால் மட்டும் தான் இந்த தீர்மானம் நிறைவேறும். தற்போதைய நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. அதாவது டொனால்ட் டிரம்ப் தகுதிநீக்கப்பட வேண்டுமானால் 67 செனட் உறுப்பினர்களின் ஓட்டுக்கள் தேவைப்படுகிறது. ஆனால் குடியரசு கட்சியில் இருந்து அதிகபட்சமாக 6 உறுப்பினர்கள் மட்டும் தான் எதிராக ஓட்டு போடும் வாய்ப்பு இருக்கிறது.
செனட்டில் வாதம்
செனட் சபையில் முதல் நாள் வாதம் நேற்று துவங்கி விட்டது. இன்றும் இரு தரப்பு வாதமும் நடைபெறும். இரு தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற கலவரம் தொடர்பான விவாதம் மற்றும் பிரதிவாதம் முன்வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.