டிரம்ப் பதவி நீக்க விசாரணை... இன்று நாடாளுமன்றத்தில் தொடங்கும் விசாரணை
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த விசாரணை இன்று அந்நாட்டின் செனட் சபையில் விசாரணை தொடங்குகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை அதிபர் பைடன் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்ப் படு தோல்வி அடைந்தார். அதிபர் பதவியிருக்கும் ஒருவர் தேர்தலில் தோல்வியடைவது கடந்த 25 ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.
இருந்தாலும்கூட டிரம்ப் கடைசி வரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றதாகத் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தொடர்பாக நீதிமன்றங்களில் அவர் தொடர்ந்த வழக்குகளிலும் அவருக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்கவில்லை.
அமெரிக்க கலவரம்
இந்நிலையில், கடந்த ஜனவரி 6ஆம் தேதி அதிபர் தேர்தலில் பைடன் - கமலா ஹாரிஸ் வெற்றி பெறும் நிகழ்வு நடந்தது. இருப்பினும், பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற்ற பேரணியில் டிரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். இதையடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அதில் போலீஸ் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
பதவி நீக்க தீர்மானம்
அமெரிக்க ஜனநாயகத்தில் கறுப்பு நாளாக இது கருதப்படுகிறது. இந்த வன்முறைக்கு முழுக்க முழுக்க டிரம்பின் பொறுப்பற்ற வன்முறையைத் தூண்டும் பேச்சே காரணம் என பலரும் குற்றஞ்சாட்டியிருந்தனர். மேலும், அவருக்கு எதிராகக் கடந்த ஜனவரி 13ஆம் தேதி பதவி நீக்க தீர்மானமும் பிரதிநிதிகள் சபையில் 232-197 என்ற வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது. அதற்குள்ள புதிய அதிபராக பைடன் பதவியேற்றதால் மேல் சபையில் இந்த தீர்மானம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கால தாமதம் ஏற்பட்டது.
டிரம்ப் வாதம்
இன்று மேல் சபையில் டிரம்ப் மீதான விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில் டிரம்ப் நேரடியாகக் கலந்து கொள்ள மாட்டார். அவர் சார்பில் வழக்கறிஞர் குழுவே கலந்துகொள்ளும். டிரம்ப் தற்போது அதிபர் பதவியில் இல்லை என்பதாலும் இந்த தீர்மானம் பேச்சுரிமைக்கு எதிராகவுள்ளதாலும் இது அமெரிக்க அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதே டிரம்ப் வழக்கறிஞர்களின் வாதம்.
இன்று விசாரணை
அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாகப் பதவி நீக்க விசாரணையை எதிர்கொள்ளும் ஒரே நபர் டிரம்ப் தான். அவர் மீதான பதவி நீக்கத் தீர்மானம் குறித்த விசாரணை இன்று அந்நாட்டின் செனட் சபையில் இந்திய நேரப்படி 11.30 மணிக்கு விசாரணை தொடங்குகிறது. இதில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க இரு தரப்பினருக்கும் தலா 16 மணி நேரம் ஒதுக்கப்படும். அதன் பின்னரே வாக்குப்பதிவு நடத்தப்படும்.
என்ன நடக்கும்?
டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெற மேல் சபையில் 2/3 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், தற்போது மேல் சபையில் ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சி என இரு கட்சிகளுக்கும் தலா 50 உறுப்பினர்களே உள்ளனர். டிரம்பை குற்றவாளி என அறிவிக்கக் குறைந்தபட்சம் 17 குடியரசு கட்சியினர் டிரம்பிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஆனால், இப்போதும் கூட பெரும்பாலான உறுப்பினர்கள் டிரம்பிற்கு ஆதரவாகவே உள்ளனர். இதனால் டிரம்பிற்கு எதிராக 17 குடியரசு கட்சியினர் வாக்களிக்க மாட்டார்கள் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.