கொரோனாவால் நுரையீரலில் தொற்று.. ஆனாலும் லேசாகத்தான்.. ட்ரம்ப் சொல்கிறார்
வாஷிங்டன்: கொரோனாவால் தனக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதாக அமெரிக்க அதிபரும், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, நேற்று இரவு, டவுன்ஹால் மாதிரியிலான நிகழ்ச்சி, என்பிசியில் நடைபெற்றது. அதில் ட்ரம்ப் பங்கேற்றார். ஆனால் முகக் கவசம் அணியவில்லை.
பல அடி தூரத்தில் பிற பார்வையாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர். அதே காலகட்டத்தில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வேறு இடத்தில் தோன்றி உரை நிகழ்த்தினார்.
ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேறியுள்ளார். எனவே, பிடனுடனான 2வது விவாதத்தை அவர் ரத்து செய்துவிட்டார். ஆன்லைன் மூலம் நேரடி விவாதத்தில் பங்கேற்பது டைம் வேஸ்ட் என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.
இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின்போது பேசிய ட்ரம்ப், தனக்கு உடலில் தற்போது பாதிப்பு இல்லை என்றும், கொரோனா அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், மருத்துவர்கள் ட்ரம்ப்பை பரிசோதித்து பார்த்தபோது, அவர் நுரையீரலில் லேசான தொற்று இருப்பது தெரியவந்ததாக கூறினர் என்றும் ட்ரம்ப் கூறினார்.