காஷ்மீரில் கடினமான சூழல்.. மோடி, இம்ரானுடனான பேச்சு நல்ல உரையாடலாக அமைந்தது.. டிரம்ப்
வாஷிங்டன்: காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோருடனான பேச்சு நல்ல உரையாடலாக இருந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உரையாடலில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இந்தியவின் இந்த முடிவிற்கு அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரு நாடுகளும் முறையிட்டது. எனினும் அவை எதிர்பார்த்தது நடக்கவில்லை. எனினும் காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தொலைபேசியில் உரையாடல் நடத்தினார்.
காஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு
பாகிஸ்தான் அத்துமீறல்
அப்போது காஷ்மீரில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இருநாடுகளும் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்திய பிரதமருடன் டிரம்ப் 30 நிமிடங்கள் பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்கள் குறித்து மோடி கூறியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
|
பதற்றத்தை தணிக்கும்
இந்த நிலையில் இருவருடனான பேச்சு குறித்து டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் இரு நண்பர்களான நரேந்திர மோடியுடனும் இம்ரான் கானுடன் தொலைபேசியில் பேசினேன். காஷ்மீரில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என கூறினேன்.
இரு தரப்பு நல்லுறவுகள்
மேலும் வணிகம், இருதரப்பு நல்லுறவுகள் குறித்தும் பேசினேன். சற்று கடினமான சூழல்தான் என்றாலும் நல்ல உரையாடலாக அமைந்தது என டுவிட்டரில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுப்பயணம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தன்னை மத்தியஸ்தராக இருக்கும் படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக டிரம்ப் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அமெரிக்கா அந்த கருத்தை திரும்ப பெற்றது.