மாத்தி மாத்திப் பேசும் ட்ரம்ப்... அடுத்தாண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்குமாம்!!
வாஷிங்டன்: நவம்பர் மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி அமெரிக்கர்களுக்கு கிடைத்துவிடும் என்று கூறியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது அடுத்த ஆண்டுதான் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய ட்ரம்ப், '' "தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியவுடன், மக்களுக்கு அரசு நிர்வாகம் கொரோனா தடுப்பு ஊசியை பயன்படுத்தும். இதையடுத்து, ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான மருந்துகள் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கும்.
அமெரிக்காவில் தடுப்பு மருந்து தயாரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவுடன் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சம் பேர் வரை பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தது இந்தியா இருந்து வருகிறது. பிரேசில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. ஆனால், இன்னும் நம்பிக்கை அளிக்கும் வகையில் எந்த தடுப்பூசியும் வெளியாகவில்லை. ரஷ்யா தயாரித்து இருக்கும் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி விரைவில் சந்தைக்கு வரும் என்று நம்பிக்கை அளித்து இருந்தபோதும், இந்த மருந்து போட்டுக் கொண்டவர்களில் ஏழு பேரில் ஒருவருக்கு பக்க விளைவுகள் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
ஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...டொனால்ட் ட்ரம்ப் ஆருடம்!!
இருந்தபோதும், இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்க டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்துக்கு தயாரிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இந்த தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளவும் டாக்டர் ரெட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.