சர்ச்சைக்குரிய கொரோனா நிவாரண மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: கொரோனா நிவாரண நிதி மசோதாவுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டு சர்ச்சைக்கு முடிவு கட்டியுள்ளார்.
உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியை எட்ட உள்ளது. தற்போதைய நிலையில் மொத்தம் 1,95,73,847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா உயிரிழப்புகள்
அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 3,41,138 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா நிவாரண மசோதா
இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
டிரம்ப் எதிர்ப்பு ஏன்?
ஆனால் அமெரிக்கர்களுக்கு போதுமான நிவாரண உதவி கிடைக்காது என கூறி இந்த மசோதாவில் கையெழுத்திட மறுத்து வந்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப். இதற்கு அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
டிரம்ப் கையெழுத்து
டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் பேரழிவுதான் ஏற்படும் என எச்சரித்திருந்தார் ஜோ பிடன். இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதி மசோதாவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் உச்சத்துக்குப் போன சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.