ஒரு பக்கம் ராணுவம் குவிப்பு.. மறுபக்கம், காஷ்மீர் பிரச்சினையில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்!
Recommended Video
வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக மீண்டும் ஒருமுறை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காஷ்மீருக்கு கூடுதலாக 28 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப்பை கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு காஷ்மீர் விவகாரத்தில், ட்ரம்ப் மூக்கை நுழைக்க ஆரம்பித்துள்ளார். காஷ்மீர் பிரச்சினையில் சமரச தீர்வுக்கு அமெரிக்கா உதவும் என ட்ரம்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்: சந்தேக நபர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு- இலங்கையில் புதிய சர்ச்சை
இந்தியா கறார்
ட்ரம்ப் அறிவிப்பை இந்தியா மறுத்தது. 3வது நபர் தலையீட்டை இந்தியா ஏற்காது என்று அறிவித்துவிட்டது. ஆனால், பாகிஸ்தான், ட்ரம்ப் அறிவிப்பை வரவேற்றது. இந்த நிலையில், ட்ரம்ப் நிருபர்களிடம் அளித்த லேட்டஸ்ட் பேட்டியில், மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை கிளப்பியுள்ளார்.
மீண்டும் ட்ரம்ப்
மத்தியஸ்தத்தை ஏற்பதும், நிராகரிப்பதும், பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்தை பொறுத்தது. இம்ரான் கானும், நரேந்திர மோடியும், நல்ல மனிதர்கள். அவர்களே தங்கள் நாடுகள் நடுவேயான பிரச்சினையை தீர்த்துக்கொள்வார்கள். ஆனால், அவர்கள், மத்தியஸ்தம் தேவைப்படுவதாக கருதினால், உதவ நான் தயார்.
மோடி கூறினார்
முன்னதாக ட்ரம்ப் அளித்த பேட்டியின்போது, ஜி20 உச்சிமாநாட்டில், மோடியை சந்தித்தபோது, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதற்கு இந்திய தரப்பு உடனடியாக மறுப்பு தெரிவித்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்றத்திலும் இதை தெளிவுபடுத்தினார்.
ராணுவம் குவிப்பு
இப்படியான சூழ்நிலையில்தான், காஷ்மீரில் கூடுதலாக 10,000 துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 28,000 பேர் குவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளின் காஷ்மீர் தொடர்பான அக்கறைக்கும், ராணுவ குவிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.