ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியாவில் இருந்து யு.எஸ். படையினரை திரும்பப் பெற உத்தரவிடுகிறார் டிரம்ப்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெறும் நிலையில் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சோமாலியாவில் இருந்து அந்நாட்டு ராணுவத்தினரை திரும்பப் பெறும் உத்தரவை டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்க இருக்கிறார். ஆனால் ஜோ பிடனின் வெற்றியை ஏற்க முடியாது என டொனால்ட் டிரம்ப் அடம்பிடித்து வருகிறார்.
இதனிடையே டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டன் உள்ளிட்ட பல இடங்களில் ஆதரவு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடித்த சம்பவங்களும் நிகழ்ந்தன.
இந்நிலையில் உலக நாடுகள் அனைத்துமே டிரம்ப் அமைதியான முறையில் அதிகார மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தருவாரா? என எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதனிடையே அதிபர் பதவியில் இருந்து விடைபெறும் நிலையில் சில அதிரடி உத்தரவுகளை டிரம்ப் பிறப்பிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சோமாலியா நாடுகளில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்களை திரும்ப அழைக்கும் உத்தரவை டொனால்ட் டிரம்ப் பிறப்பிக்கலாம் என்கின்ற தகவலறிந்த வட்டாரங்கள்.