பதவி இழக்கும் நேரத்தில் ஈரான் அணு மையம் மீது தாக்குதலுக்கு திட்டமிட்ட டிரம்ப்.. உலக நாடுகள் ஷாக்
வாஷிங்டன்: ஈரானில் உள்ள முக்கியமான அணு மையத்தை தாக்குவது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா. ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில்தான் அமெரிக்க தேர்தல்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்துள்ளார்.
ஜோ பிடன் வெற்றியை சூசகமாக ஒப்புக்கொண்ட டிரம்ப்... பிடிவாதத்தை தளர்த்தும் வகையில் டிவிட்..!
அதிரடி மாற்றங்கள்
ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ள நிலையில் டொனால்டு டிரம்ப் தனது பொறுப்புகளை மாற்றி கொடுப்பதற்கு முன்பாக பல அதிரடிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில்தான் ஒரு திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள், துணை அதிபர் மைக் பென்ஸ், புதிய பாதுகாப்பு துறை பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ்டோபர் மில்லர் உள்ளிட்டோருடன் டொனால்டு டிரம்ப் ஆலோசனை நடத்தியிருந்தார்.
அணு மையம்
அப்போது ஈரானில் உள்ள அணு சக்தி மையம் மீது தாக்குதல் நடத்தலாமா என்று டொனால்ட் ட்ரம்ப் கருத்து கேட்டுள்ளார். ஆனால், அதிகாரிகள் அவ்வாறு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர். எனவே, அமெரிக்கா அந்த முடிவுக்கு செல்லவில்லை. இவ்வாறு தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்ததாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்பின் அதிரடி
இது பற்றி வெள்ளை மாளிகையிடம் செய்தி நிறுவனங்கள் கருத்து கேட்டதற்கு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி பாக்தாத் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார்.
ஜோ பிடனுக்கு சிக்கல்
ஒருவேளை இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரான் அணு ஆயுத மையம் மீது தாக்குதல் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு அதை நடத்தி இருந்தால், அந்த மண்டலத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டு இருக்கும். உயிர் பலி ஏற்பட்டிருக்க கூடும். ஜோ பிடன் நிர்வாகத்திற்கு வெளியுறவுத்துறை கொள்கையில் பெரும் சிக்கல்கள் உருவாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.