ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன்.. 'முருங்கை மரம்' ஏறும் டிரம்ப்.. டென்ஷனில் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பிடன் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்கப் போகும் விழாவில், தான், பங்கேற்க போவது கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் ஆகியோர் போட்டியிட்டனர். ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இந்த வெற்றியை ஏற்க டொனால்டு டிரம்ப் மறுத்து வருகிறார்.
ஜோ பிடன் வெற்றிக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் தரப்பு பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இருப்பினும் தேர்தல் வெற்றி சான்றிதழை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் பரிசீலனை செய்யும் போது திடீரென ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அங்கு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
மன்னிப்பு.. அதுவும் "சுய மன்னிப்பு".. இப்போதைக்கு டிரம்ப்புக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை இதுதானாம்!
வன்முறை
பல மணி நேரத்துக்கு பிறகு காவல்துறை இந்த போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. உலகநாடுகள் முழுக்க இந்த விவகாரத்தால் அதிர்ச்சியடைந்து போயின. இப்படியான சூழ்நிலையில் ஜோ பிடன் வெற்றியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்து விட்டனர். எனவே ஜனவரி 20ஆம் தேதி திட்டமிட்டபடியே ஜோ பிடன், அதிபராகவும், துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர்.
டிரம்ப் அறிவிப்பு
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 20ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்க போவது கிடையாது என்று தெரிவித்துள்ளார். பலரும் இது பற்றி தன்னிடம் கேட்டதாகவும், அதற்கான பதில் இது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மக்களிடம் சந்தேகம்
முன்னதாக டிரம்ப் வெளியிட்ட வீடியோ பதிவில் ஜனவரி 20ஆம் தேதி புதிய நிர்வாகம் பொறுப்பேற்க உள்ளது. அமைதியான, சுமூகமான அதிகார பரிமாற்றம் எனது நோக்கம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் மறுபடியும் ஏதேனும் பிரச்சினை செய்வார்களா என்று மக்களில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
வரலாற்றில் முன்பு
இதற்கு முன்பாக, 1869ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆண்ட்ரூ ஜான்சன் பதவி வகித்தபோது அடுத்ததாக பதவியேற்கவிருந்த யுலிசஸ் எஸ்.கிராண்ட்டின் பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்காமல் தவிர்த்தார். ஆண்ட்ரூ ஜான்சனுக்கு பிறகு இவ்வாறு ஒருவ அதிபர், புதிய அதிபர் பதவியேற்பு விழாவை தவிர்க்கப் போவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.