வேகமாக மாறி வரும் வட துருவம்.. மீண்டும் தலைகீழாகும் பூமியின் காந்தப் புலங்கள்?
பூமியின் வடகாந்தத் துருவம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக மாற்றம் அடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
வாஷிங்டன்: பூமியின் வட காந்த முனையில் விரைவான மாற்றம் அடைந்து வருவதாக பீதி கிளப்புகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் திசைகாட்டும் கருவியில் புதிய மாற்றங்கள் வேகவேகமாக செய்யப்பட்டு வருகிறது.
பூமியின் தற்போதுள்ள இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியவை தான் எனக் கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, பூமியின் வடக்கு காந்த துருவத்தில் விரைவான மாற்றங்கள் நடைபெற்று வருவதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாகப்பட்டது பூமிப் பந்தின் வட துருவ காந்தப் புலம் தொடர்ந்து நகர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
இடம் பெயர்வு:
வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்டது 1881ம் ஆண்டில் இருந்து தான். ஆனால், அப்போதிருந்தே அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் பெயர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஆனால், இந்த வேகமானது கடந்த சில ஆண்டுகளாக மிக மிக அதிகரித்துள்ளது. அதாவது, வட காந்தப் புலம் தற்போது ஆண்டுக்கு, 30 முதல் 40 கி.மீட்டர் வரை இடம் பெயர ஆரம்பித்திருக்கிறது.
திசைகாட்டி ஊசி புள்ளிகள்:
வட காந்த முனை நோக்கி திசைகாட்டி ஊசி புள்ளிகள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த வடபுல மாற்றத்தால், திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே, கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை மேம்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
லேசான பாதிப்பு:
இந்த புல நகர்வால் வட துருவத்திற்கு அருகே இருப்பவர்களுக்கே லேசான பாதிப்பு ஏற்படும். அதற்குத் தள்ளி இருக்கும் நாடுகள், இப்போதைக்கு இதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
புதுப்பிப்பு:
2020 ஆம் ஆண்டில் ஒரு உலக காந்த திசை வழிகாட்டி மாதிரியின் ஐந்து வருடகால புதுப்பிப்பு நடைபெறும். 'உலக காந்த மாதிரி' உருவாக்கும் அமெரிக்காவின், என்.ஓ.ஏ.ஏ., எனப்படும், 'தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம்' வட புல நகர்வை தொடர்ந்து, காந்த மாதிரியை புதுப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.