அமெரிக்காவிலும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபிக்கு அனுமதி!!
வாஷிங்டன்: அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அந்த நாட்டில் கொரோனா நோய்க்கான பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி அளித்து இருப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த சிகிச்சை மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் ஏற்கனவே கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போது, அமெரிக்காவில் தற்போதுதான் இந்த சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து டொனால் ட்ரம்ப் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''நமது நாட்டின் பல உயிர்களை சீன வைரஸ் எடுத்துக் கொண்டுள்ளது. உயிர்களை காப்பாற்றும் வகையில் அவசரத்திற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தற்போது அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். வேகமாக பணியாற்றி வருவதால் அனைத்தும் சாத்தியமாக இருக்கிறது. விரைவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்தப்படும்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு செய்வதற்கு என்று 48 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உயிரிழப்பை பிளாஸ்மா தெரபி 35 சதவீதம் குறைக்கும். தற்போதைய ஆய்வின்படி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த சிகிச்சை பெறுவதற்கு தங்களது பெயரை பதிவு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது'' என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று வந்திருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, அதில் இருந்து பிளாஸ்மா பிரிக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று ஆய்வில் தெரிய வந்த பின்னர் இந்த சிகிச்சையை இந்தியாவும் பின்பற்றி வருகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா ரத்த வங்கியும் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார்.
அப்பாடா.. கட்டுப்பாட்டை நீக்கிய கர்நாடகா! தமிழகத்திலிருந்து பெங்களூர் நோக்கி அணி வகுக்கும் வாகனங்கள்
Recommended Video
அமெரிக்காவிலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தங்களது ரத்தத்தை அளிக்க முன்வர வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். உலகிலேயே கொரோனாவுக்கு அமெரிக்காவில்தான் குறைந்தளவில் உயிரிழப்பு விகிதம் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை 64,000 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.