வன்முறையை தூண்டும் ஒழுங்கீனமான டிரம்ப்... உளவு துறை ரகசியங்களை பெறக் கூடாது.. பைடன் ஆவேசம்
வாஷிங்டன்: ஒழுங்கீனமான முறையில் நடந்து வன்முறையைத் தூண்டிய முன்னாள் அதிபர் டிரம்ப் உளவு துறை ரகசிய குறிப்புகளைப் பெறக் கூடாது என்று அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் வென்ற பைடன், அமெரிக்க அதிபராக ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அப்போது முதலே டிரம்பின் பல்வேறு உத்தரவுகளை பைடன் மாற்றி வருகிறார். இவருக்கான ஆதவரும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் அமெரிக்கா மீண்டும் இணைந்து செயல்படும் என்று பைடன் உத்தரவிட்டார். அதேபோல மெக்சிகோ சுவர் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதித்தார்.
ரகசிய குறிப்புகள்
இப்படி பழைய அரசின் ஒவ்வொரு உத்தரவையும் காலி செய்து வரும் பைடன், டிரம்பை இதுவரை நேரடியாக விமர்சிக்காமலிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு பைடன் அளித்த பேட்டியில், முன்னாள் அதிபர் டிரம்பிற்கு உளவு துறை குறிப்புகள் வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பைடன், "உளவு துறையின் ரகசிய குறிப்புகள் அவருக்குத் தேவைப்படாது என்றே நான் நினைக்கிறேன்.
ஒழுங்கீனமான டிரம்ப்
அவருக்கு ரகசிய குறிப்புகளை வழங்குவதால் யாருக்கு என்ன பயன்? அப்படி அவருக்கு ரகசிய குறிப்புகளை வழங்கினாலும் அவர் மற்றவர்களிடம் அது குறித்து உளறிவிட மாட்டார் என என்ன நிச்சயம்" என்றார். மேலும், ஜனவரி 6ஆம் தேதி டிரம்பின் தூண்டுதலின் பெயரில் நடைபெற்ற வன்முறை தாக்குதலையும் அவர் சுட்டிக்காட்டினர். இப்படி ஒழுங்கீனமாக நடந்துகொள்பவருக்கு எதற்கு உளவு துறை குறிப்புகளை வழங்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
உளறிய டிரம்ப்
டிரம்ப் அதிபராக இருந்தபோது, உளவு துறையின் ரகசிய குறிப்புகளை அவர் கையாள்வது பல முறை சர்ச்சையானது. 2017ஆம் ஆண்டு மே மாதம், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரை டிரம்ப் சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் டிரம்ப், திடீரென்று உளவுத் துறை குறிப்பை உளறிவிட்டார். இதேபோன்ற சம்பவங்கள் பல முறை நடைபெற்றுள்ளது. இதனாலேயே டிரம்பிற்கு உளவுத் துறை குறிப்புகளை இப்போது அளிக்க பைடன் தயக்கம் காட்டுகிறார்.
விசாரணை
ஜனவரி 6ஆம் தேதி, பைடன் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நடைபெற்றபோது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். டிரம்ப் தூண்டியதன் பெயரிலேயே இந்த வன்முறை நடைபெற்றதாக, அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் எடுத்து வரப்பட்டது. கீழ் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தப் பதவி நீக்க விசாரணை, வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மேல் சபையில் தொடங்க உள்ளது.