கிட்ட வந்து.. கட்டிப்பிடித்து! "ஐயோ.." பெண் அதிகாரி ஆசைக்கு இணங்காத ஊழியரை பணி நீக்கம் செய்த கூகுள்?
வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் தனது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், முன்னாள் கூகுள் அதிகாரி சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த 2023ஆம் ஆண்டு யாருக்கும் அவ்வளவு ஈஸியாக இருக்காது போல. கொரோனா முடிந்தாலும் கூட.. அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் உலக நாடுகளை வைத்துச் செய்யத் தொடங்கியுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து எந்த நாடும் இதில் இருந்து தப்பவில்லை. அமெரிக்காவில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
குழந்தையை பிரசவித்த சில மணி நேரங்களில்.. வேலையை விட்டு தூக்கிய கூகுள் ஊழியர்.. தொடரும் சோக கதைகள்
டெக் நிறுவனங்கள்
இதன் காரணமாக அங்கும் கூட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆட்குறைப்பு என்றால் ஏதோ ஸ்டார்ட் அப் மற்றும் சின்ன நிறுவனங்கள் என்று நினைத்துவிட வேண்டாம். பெரிய டெக் ஜாம்பவான்கள் கூட தற்போதுள்ள நிலையைச் சமாளிக்க ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கூகுள், பேஸ்புக், ட்விட்டர் என்று பெரிய டெக் நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கூகுள்
குறிப்பாக மிகப் பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் சில வாரங்களில் மட்டும் பல நூறு பேரை வேலையைவிட்டு நீக்கியுள்ளது. இதனிடையே முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவர், ஒரு பெண் உயர் அதிகாரி தன்னிடம் உறவு கொள்ள முயன்றதாகவும் அதை நிராகரித்ததாலேயே தன்னை கூகுள் பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறி அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் 2019 டிசம்பரில் மன்ஹாட்டன் உணவகத்தில் நடந்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு
பாலியல் துன்புறுத்தல், பாலினப் பாகுபாடு, இனப் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த நபர் கூகுளில் உணவு, டிரிங்க்ஸ் பிரிவில் மூத்த நிர்வாகியாக வேலை செய்து வந்தார். கூகுளின் புரோகிராமிங் மீடியாவில் முக்கிய பதவியில் இருந்த அவரை விட வயதில் மூத்த பெண் ஒருவர், அவரிடம் தவறாக நடந்துள்ளார். மூத்த பெண் அதிகாரியின் நடத்தை மிகவும் சங்கடமாக்கியது என்றும் இதனால் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது
அதாவது ஆபிஸ் டின்னருக்கு அனைவரும் உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் அதிகாரி பின்னால் இருந்து வந்து கட்டிப்பிடித்துள்ளார். மேலும், "உனக்கு என் டைப் பெண்களை ரொம்ப பிடிக்கும் எனத் தெரியும்" என்றும் சொல்லி அழைத்துள்ளார். இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளாகி அங்கிருந்து கிளம்பிவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகப் புகார் அளித்தும் கூட கூகுளின் மனிதவளத் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை இல்லை
மேலும் அவர், "அதில் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே ஒரு வெள்ளை இன ஆண் மீது பெண் ஒருவர் புகார் அளித்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால், எனது புகார் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர்" என்று தெரிவித்தார். இந்த நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார்.. அனைவருடனும் இணைந்து வேலை செய்யவில்லை என்றே காரணமாகச் சொல்லி வேலையை விட்டு நீக்கியிருந்தனர். இதன் காரணமாகவே அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறுப்பு
இருப்பினும், அந்த பெண் அதிகாரி இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என்றும் வேலையை விட்டு நீக்கிய அதிருப்தியில் அந்த நபர் இப்படி பொய்யாக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில், கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில் சுமார் 12,000 பேர் வேலையிழந்தனர். இது அவர்களின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 6 சதவீதமாகும். கூகுள் தொடங்கப்பட்டதில் இருந்து அங்கு நடந்து மிகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது.