இந்திய ஐடி துறையை பழிவாங்க துடிக்கும் அமெரிக்கா! தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் டிரம்ப்!
வாஷிங்டன்: இதுவரை பொருட்களுக்கு மட்டுமே வரியை போட்டு வந்த டிரம்ப், தற்போது சேவைகளுக்கும் வரியை போட திட்டமிட்டு வருகிறார். இந்தியாவின் ஐடி துறையை குறி வைத்து இந்த நகர்வை டிரம்ப் மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அப்படி மட்டும் நடந்தால் டிரம்ப் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்கு சமமாகிவிடும் என்று பலரும் எச்சரிக்கின்றனர்.
அதாவது டிரம்ப் இந்தியாவுக்கு 50% அளவுக்கு வரியை போட்டிருக்கிறார். இந்த வரி காரணமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அனைத்து பொருட்களும் அமெரிக்காவில் கூடுதல் விலைக்கு விற்கப்படும். எனவே அமெரிக்க மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிப்பார்கள். இதனால் இந்தியாவில் ஏற்றுமதி அடிவாங்கும்.

ஆனால் இனி வரும் நாட்களில், சேவை துறைக்கும் வரியை விதிக்க டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது, இந்தியா டிஜிட்டல் சேவை வரியை வசூலிக்கிறது. கூகுள், அமேசான், மெட்டா நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பயனாளர்களை கொண்டு அதிக லாபம் ஈட்டுகின்றன. இந்த லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக கட்ட வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டிருந்தது. இதைத்தான் டிஜிட்டல் சேவை வரி என்பார்கள்.
இந்த வரியை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது. எனவே இதேபோன்று தங்களுக்கு சேவைகளை வழங்கும் இந்திய நிறுவனத்திற்கு வரியை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அதேபோல தொலைதூரப் பணியாளர்கள் மற்றும் அவுட்சோர்ஸ் சேவைகளைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் புதிய சட்டங்கள் இயற்றப்படலாம். உதாரணமாக, வெளிநாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படும் வேலைகளுக்கு நிறுவனங்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்படலாம்.
இதற்கு அடுத்தபடியாக H-1B விசாக்களுக்கு அதிகக் கட்டணம் விதிப்பது, விண்ணப்ப செயல்முறைகளைக் கடினமாக்குவது, அல்லது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதைக் கட்டுப்படுத்துவது போன்ற விசா விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் இந்திய ஐடி துறையை பழிவாங்கி, வழிக்கு கொண்டு வரலாம் என அமெரிக்கா யோசித்து வருகிறது. இப்படி நடந்தால் இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசென்ட் மற்றும் எச்.சி.எல் போன்ற நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
ஆனால், மறுபுறம் இந்தியர்களை போல அறிவுத்திறன் மிக்கவர்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு தேடி எடுக்க அமெரிக்காவால் நிச்சயம் முடியாது. இப்போது இருக்கும் சூழலில், அமெரிக்காவின் ஐடி தேவையை இந்தியா அல்லது சீன மக்களால்தான் பூர்த்தி செய்ய முடியும். அமெரிக்காவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருட்கள் அல்ல, மக்கள்தான். மென்பொருள் பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்கள் மற்றும் மாணவர்களை நாம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.
மேற்குறிப்பிட்ட வரியெல்லாம் போட்டால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்படும்தான். ஆனால் அதைவிட அமெரிக்க மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். கையை வெட்டிக்கிட்டா சுண்ணாம்புக்கு கூட நம்மகிட்டதான் அவர்கள் வர வேண்டும். ஏனெனில் அமெரிக்காவில் உள்ள சிறந்த தொழில்நுட்ப பணியாளர்கள், இப்போது இந்தியர்கள் வாங்கும் கூலிக்கு வந்து வேலை செய்ய மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை நமக்கு தரப்படும் ஊதியம் என்பது அடிமாட்டு சம்பளம்.
எனவே நிறைய செலவு செய்த சொந்த மக்களின் திறனை பயன்படுத்தி நாட்டை முன்னேற்றுவோம் என்பதெல்லாம் நடக்காத கதை. காசு வந்துவிட்டால் அமெரிக்க முதலாளிகளுக்கு தேசப்பற்று எல்லாம் ஒன்னும் இருக்காது. அதனால்தானே இப்போது வரை இந்தியர்களை வேலைக்கு அழைத்து செல்கிறார்கள். எனவே டிரம்பின் இந்த யோசனை அமல்படுத்தப்பட்டதால் அது அமெரிக்காவுக்குதான் சிக்கல்.












Click it and Unblock the Notifications