கொரோனா சிகிச்சையில் 'கேம் சேஞ்சர்;.. 2 புதிய மருந்துகள் பரிந்துரை- WHO உத்தரவு இதனால் தான் முக்கியம்
வாஷிங்டன்: ஓமிக்ரான் கொரோனாவால் கேஸ்கள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கு இரண்டு மருந்துகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரை அளித்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு இன்னும் எந்த நாட்டிலும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. இதைச் சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறியே வருகிறது.
ஆல்பா, டெல்டா கொரோனா வகைகளைப் போல இப்போது ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் அடுத்த அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகெங்கும் கொரோனா கேஸ்கள் மிக வேகமாக உயர்கிறது.
2 மருந்துகள்
இந்தச் சூழலில் கொரோனா சிகிச்சைக்கு ஒவ்வொரு சமயத்திலும் அப்போதுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு புதிய தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்து வருகிறது. ஓமிக்ரான் கொரோனாவால் உலகெங்கும் கொரோனா கேஸ்கள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் சூழலில் இப்போது பாரிசிட்டினிப் மற்றும் சோட்ரோவிமாப் (baricitinib and sotrovimab) ஆகிய இரண்டு மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
பாரிசிட்டினிப்
முடக்கு வாத சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பாரிசிட்டினிப் மருந்தை, கார்டிகோஸ்டீராய்ட் (corticosteroids) உள்ளிட்ட இணை நோய்களைக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வாய்வழியாக அளிக்கப்படக் கூடிய இந்த மருந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான தூண்டுதலைக் குறைக்கும் ஒரு வகை மருந்தாகும். இதேபோல Interleukin-6 receptor blockers என்றொரு மருந்தை உலக சுகாதார அமைப்பு கடந்த ஜூலை மாதம் பரிந்துரைத்திருந்தது.
சோட்ரோவிமாப்
அமெரிக்காவில் வீர் பயோடெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து GlaxoSmithKline நிறுவனம் உருவாக்கியது சோட்ரோவிமாப். மருத்துவ உதவி தேவைப்படும் ஆபத்தில் உள்ள லேசான அல்லது மிதமான கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க இதைப் பயன்படுத்தலாம் என்று நிபந்தனையுடன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு இதை பயன்படுத்தலாம்.
எப்படி செயல்படுகிறது
பொதுவாக ஒருவருக்குத் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படும் போது அவரது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் மருந்துகள் அளிக்கப்படும். பின்னர் அவை பாரிசிடினிப் மூலம் குறைக்கப்படும். டெல்டா அலை ஏற்பட்ட சமயத்தில் இருந்தே இந்த பாரிசிடினிப் மருந்தைப் பயன்படுத்தி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், அதேநேரம் லேசான கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கு இதைக் கொடுக்க வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல சோட்ரோவிமாப் மருந்தானது ஓமிக்ரான் மற்றும் டெல்டா கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் கிடைக்குமா
இதில் பாரிசிடினிப் விலை குறைவானது. பரவலாகக் கிடைக்கக் கூடியது. இது கொரோனா பரவல் ஏற்பட்ட பின்னர் பொதுவாக 7 முதல் 14 நாட்களில் ஒருவருக்குக் கொடுக்கப்படும். மூச்சுத்திணறல் ஏற்படும் சமயத்தில் ஸ்டெராய்டு மற்றும் டோசிலிசுமாப் பயன்படுத்தப்படுகிறது. டோசிலிசுமாப் தட்டுப்பாடு ஏற்படும்போது பரிசிட்டினிப் பயன்படுத்தப்படுகிறது. சோட்ரோவிமாப் மருந்துக்கு இப்போது இந்தியாவில் அனுமதி இல்லை என்றாலும் ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதற்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
ஏன் முக்கியம்
ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் வேகம் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த மருந்துகள் கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.