குவாட் ஒத்துழைப்பு, மியான்மர் ஆட்சி கவிழ்ப்பு.. ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க உள்துறை செயலர்
வாஷிங்டன்: மியான்மர் ராணுவ ஆட்சி கவிழ்ப்பு குறித்தும் இந்தோ பசிபிக் பகுதியில் நிலவும் நிலைமை குறித்தும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க உள்துறை செயலருடன் ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக பைடன் கடந்த ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் பல முக்கிய அதிகாரிகளுடன் பதவியேற்றனர். அதன்படி அமெரிக்காவின் உள் துறை செயலராக ஆண்டனி பிளிங்கன் பதவியேற்றார்.
இந்நிலையில், உள் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க உள் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் நேற்று தொலைப்பேசி மூலம் உரையாடினார். இதில் என்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்த அதிகார்பூர்வ தகவல்களை இருதரப்பும் இதுவரை வழங்கவில்லை.
இருப்பினும், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், "ஆண்டனி பிளிங்கனுடன் விரிவான ஆலோசனையில் நடத்தினேன். இந்தோ-பசிபிக், குவாட் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஆலோசித்தோம். அதேபோல மியான்மர் நிலைமை குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாடினார். அப்போது மியான்மரில் ஜனநாயக ரீதியான ஆட்சி அமைவதை உறுதி செய்ய வேண்டும் என இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு, மியான்மர் ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து மியான்மர் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்திருந்தார். அதேநேரம் மியான்மர் நாட்டுடன் ராணுவ மற்றும் அரசியல் ரீதியாக முக்கிய உறவுகளைக் கொண்டுள்ள இந்தியா, இதில் மென்மையான அணுகுமுறையையே கையாண்டுள்ளது. ஜனநாயக ஆட்சி முறை மீண்டும் மியான்மரில் ஏற்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.