பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என எஃப்ஏடிஎஃப் எச்சரிக்கை!
வாஷிங்டன்: தீவிரவாதத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் கருப்புப் பட்டியலில் சேர்த்துவிடுவோம், என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதி ஆதாரங்களை கண்காணித்து தடுப்பதற்கான பணிகளை சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (FATF) செய்து வருகிறது. பல்வேறு நாட்டு அரசுகளின் கூட்டமைப்பாக இது செயல்படுகிறது.
தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறி, கடந்த ஆண்டு ஜூனில் அந்நாட்டை கிரே பட்டியலில் சேர்த்தது. இதனால், பாகிஸ்தானுக்கு உலக அரங்கில் நிதி ஆதாரங்களை திரட்டுவதிலும், கடன் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 16ந் தேதி முதல் 6 நாட்களுக்கு இந்த அமைப்பின் ஆய்வு கூட்டம் அமெரிக்காவில் உள்ள ஆர்லாண்டோ நகரில் நடந்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி ஆதாரம் செல்வது குறித்து எஃப்ஏடிஎஃப் அமைப்பிடம் இந்தியா சார்பில் புதிய ஆதாரங்களை அளித்தது.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான நடிவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு இருந்த 10 அம்ச செயல்திட்டம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன.
ஆனால், குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை பாகிஸ்தான் செயல்படுத்தவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து, வரும் அக்டோபர் மாதத்திற்குள் தீவிரவாதிகள் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஃப்ஏடிஎஃப் அமைப்பு கூறியுள்ளது.
இல்லையெனில், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்த்துவிடுவோம் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அந்நாட்டுக்கு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவற்றிலிருந்து நிதி உதவி மற்றும் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
தற்போதே பாகிஸ்தான் அரசு பெரும் பொருளாதார சிக்கலில் தவிக்கிறது. சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமாகும் நிலை ஏற்படும்.