ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் போல 5 அல்லது 6 அரபு நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம்: டிரம்ப்
வாஷிங்டன்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் வரிசையில் மேலும் 5 அரபு நாடுகள் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்துக்கு தயாராக உள்ளதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம் என்கிற முழுமையான தனிநாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்பது அரபு நாடுகளின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இதனை இஸ்ரேல் நிராகரித்ததுடன் பாலஸ்தீனத்தின் பகுதிகளை தொடர்ந்து ஆக்கிரமித்து இனப்படுகொலை செய்து வருகிறது.
டிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்
அன்று எகிப்து, ஜோர்டான்
இதனால் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டிருந்தது. அரபு நாடுகளின் இந்த கொள்கையில் தளர்வுகளும் ஏற்பட தொடங்கின. 1979-ம் ஆண்டு எகிப்தும் 1994-ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் நட்புறவு பாராட்டின. இந்த நாடுகளுடன் தூதரக உறவு முதல் அனைத்து வகையான உறவுகளையும் இஸ்ரேல் மேற்கொண்டது.
மத்திய கிழக்கில் ஈரான்
இன்னொரு பக்கம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் கை ஓங்கி வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஈரான் தளபதி சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்தது. இதனையடுத்து ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான்-அமெரிக்கா இடையேயான உறவு சீர்குலைந்தது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் செல்வாக்கை குறைக்கும் வகையில் அமெரிக்கா கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தாம் அமைதி ஒப்பந்தங்கள்.
இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம்
இதன் முதல் கட்டமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கினார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப். மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் இஸ்ரேலுடன் தூதரக உறவை மேற்கொள்ளும் அரபு நாடானது ஐக்கிய அரபு அமீரகம். இதன் அடுத்த கட்டமாக அமீரகத்தின் முதல் விமானம் இஸ்ரேல் சென்றுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் இந்த அமைதி முயற்சிக்காக அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்- யுஏஇ- பஹ்ரைன்
இந்த நிலையில் 2-வது கட்டமாக இஸ்ரேலுடன் பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் டிரம்ப். இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகம்- பஹ்ரைன் இந்த 3 நாடுகளிடையேயான அதிகாரப்பூர்வமான அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா அதிபர் டிரம்ப் முன்னிலையில் செவ்வாய்க்கிழமையன்று கையெழுத்தானது. ஆனால் அமெரிக்காவின் இத்தகைய முயற்சிகளையும் அரபுநாடுகளின் இஸ்ரேலுடனான உறவுகளையும் பாலஸ்தீனம் மிக கடுமையாக விமர்சித்து முதுகில் குத்தும் துரோகம் என கூறி வருகிறது.
மேலும் சில நாடுகள் ஒப்பந்தம்
3 நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்கா அதிபர் டிரம்ப், இஸ்ரேலுடன் மேலும் 5 அல்லது 6 அரபு நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக உள்ளன. இந்த அமைதி ஒப்பந்தங்களும் விரைவில் கையெழுத்தாகும் என்றார். தற்போது சவுதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சவுதி அரேபியா திறந்த மனதுடனேயே இருக்கிறது என ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா பின் என கூறியிருந்தார். இதனால் இஸ்ரேலுடன் விரைவில் சவுதி அரேபியா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடும் என தெரிகிறது.