கொரோனா சிகிச்சைக்கான... ரெம் டெசிவர் மருந்துக்கு அமெரிக்கா முழு ஒப்புதல்...!
வாஷிங்டன்: கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்துக்கு நிபந்தனைகளை தளர்த்தி அமெரிக்கா முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் கண்டறியும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம் டெசிவர் மருந்துக்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்துக் கழகம் முழு ஒப்புதல் அளித்திருக்கிறது. கடந்த மே மாதமே இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிட்டாலும் கூட நிபந்தனைகளுடன் கூடிய அங்கீகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
இப்போது முழு ஒப்புதல் தரப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் ரெம் டெசிவர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே ரெம் டெசிவர் மருந்துடன் மலேரியா மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என அதன் லேபிலில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது மருந்தின் வீரியத்தை குறைக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பூசிக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக ரெம் டெசிவருக்கு முழு ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது.
இந்தியாவை சுற்றி சீனா செய்யும் தந்திரம்.. அதிர்ந்த அமெரிக்கா.. இலங்கை வருகிறார் பாம்பியோ!
ரெம் டெசிவர் மருந்து அளிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கான காலம் 15 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் கொரோனாவால் டிரம்ப் பாதிக்கப்பட்ட போது அவருக்கு ரெம் டெசிவர் மருந்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.