மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு.. ஹெபடைடிஸ் சி வைரஸை கண்டுபிடித்தவர்கள்
வாஷிங்டன்: ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக, அமெரிக்க விஞ்ஞானிகளான ஹார்வி ஜே. ஆல்டர் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹாக்டன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான ஹெபடைடிஸ் சி, நோயாளிகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஹெபடைடிஸ் சி காரணமாக, 400,000 இறப்புகள் ஏற்படுவதாக, உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. இந்த நோய் கல்லீரல் அழற்சி மற்றும் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணமாகும்.
இந்த நிலையில், 2020ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான ஹார்வி ஜே. ஆல்டர் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹாக்டன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் உள்ள நோபல் ஃபோரமில், இதுதொடர்பாக அறிவிப்பு வெளியானது. மேலும், நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெபடைடிஸ் சி வைரஸின் கண்டுபிடிப்பு நாள்பட்ட ஹெபடைடிஸுக்கான காரணத்தை கண்டறிந்ததுடன், ரத்த பரிசோதனைகளின் வாயிலாக நோயை கண்டறிந்து புதிய மருந்துகளை உருவாக்குவதற்கு சாத்தியமாகியது. இதனால், பல லட்சம் மக்கள் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.
புயலா? புஸ்வானமா? தேனியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் ஓபிஎஸ்- நாளை மறுநாள் க்ளைமாக்ஸ்!
இந்த விஞ்ஞானிகளின் பணிக்கு முன்னர், ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி வைரஸ்களின் கண்டுபிடிப்பு முக்கியமான விஷயங்கள் ஆகும். ஆனால் ரத்தத்தில் பரவும் ஹெபடைடிஸ் கேஸ்களில் பெரும்பாலானவை விளக்கப்படாமல் இருந்தன. இவர்களின் ஆய்வு அதற்கான விளக்கத்தை வழங்கியது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.