சரித்திர நிகழ்வுகளின் முக்கிய சாட்சி.. ஜார்ஜ் புஷ் சீனியர்!
Recommended Video
வாஷிங்டன்: வீழ்த்தப்பட்ட பெர்லின் சுவர்.. உடைந்து சிதறிய சோவியத் யூனியன்.. சதாம் உசேன் படையெடுத்த குவைத்.. இப்படி பல முக்கிய சரித்திர நிகழ்வுகளின் முக்கிய சாட்சியாக திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ், சுருக்கமாக புஷ் சீனியர்.
புஷ் சீனியர் சாதாரணமானவர் இல்லை. பல அவதாரம் தரித்தவர். அமெரிக்க வரலாற்றில் முக்கியமான தலைவராக விளங்கியவர். ஆரம்பத்தில் இவர் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றினார். 2ம் உலகப் போரில் தீவிரமாக பங்கெடுத்தவர். பின்னர் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் இயக்குநராக பணியாற்றியவர்.
அதன் பின்னர் தூதராக மாறினார். அமெரிக்காவுக்கான சீனத் தூதராகப் பணியாற்றியுள்ளார். ஐநாவில் தூதராகப் பணியாற்றியுள்ளார். தூதராக இருந்து பின்னர் அரசியலில் புகுந்தார்.
ரீகனுக்கு வலது கரம்
ரொனால்ட் ரீகனின் வலது கரம் போல திகழ்ந்தவர் புஷ் சீனியர். 2 முறை அமெரிக்க துணை அதிபராக பதவி வகித்துள்ளார். 8 ஆண்டுகள் துணை அதிபராக பதவி வகித்த புஷ் சீனியர், பின்னர் 1989ம் ஆண்டு அதிபரானார். இவர் அதிபராக இருந்த காலத்தில் உலகம் பல முக்கிய சரித்திர நிகழ்வுகளை சந்தித்தது.
முடிவுக்கு வந்த பனிப்போர்
அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையிலான பனிப் போர் உலகம் அறிந்தது. எப்போது முட்டிக் கொள்வார்கள், எப்போது போர் வெடிக்கும் என்ற அச்சம் அப்போது மிகச் சாதாரணமானதாக இருந்தது. அதை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை இவருக்கும், முன்னாள் சோவியத் அதிபர் கோர்பசேவுக்கும் உண்டு. இவர்களது காலத்தில்தான் சோவியத் யூனியன் - அமெரிக்கா இடையிலான பனிப் போர் முடிந்தது. முடிந்த வேகத்தில் சோவியத் யூனியன் பல துண்டுகளாக சிதறிப் போனது.
வீழ்ந்தது பெர்லின் சுவர்
புஷ் சீனியர் பார்த்த இன்னொரு சரித்திர சம்பவம் பெர்லின் சுவர் இடிப்பு. இதில் புஷ் சீனியருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்ற போதிலும் அவர் காலத்தில் நடந்த மிகப் பெரிய சரித்திர நிகழ்வு இது. 1961ம் ஆண்டு ஜெர்மனியை இரண்டாகப் பிரித்து கட்டப்பட்ட இந்த சுவரானது, 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இடிக்கப்பட்டது.
ஈராக் மீது படையெடுப்பு
அமெரிக்க அதிபர் என்றாலே ஏதாவது ஒரு நாட்டின் மீது படையெடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. அந்த வகையில் புஷ் சீனியரும் ஒரு போரில் ஈடுபட்டார். அது குவைத்தில் புகுந்து அதை ஆக்கிரமித்து வைத்துக் கொண்ட ஈராக் படையினர் மீதான போர். 1991ம் ஆண்டு குவைத்தில் புகுந்த ஈராக் படையினர் பாதி குவைத்தை பிடித்து விட்டனர். அதை தங்களது நாட்டுடன் இணைப்பதாகவும் அறிவித்தார் அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேன்.
அமெரிக்கா தாக்குதல்
உலக நாடுகள் இதை கடுமையாக கண்டித்தும் கூட சதாம் சட்டை செய்யவில்லை. இந்த நிலையில் 1991ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அதிரடித் தாக்குதலில் இறங்கினர். ஈராக்கிய நிலைகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஈராக் படையினர் பின் வாங்கி ஓடினர். பிப்ரவரி 25ம் தேதி போர் முடிவுக்கு வந்தது. குவைத் விடுவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் குவைத் மக்கள் 1000 பேர் பலியானார்கள். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
மங்கிய செல்வாக்கு
ஆரம்பத்தில் புஷ் சீனியருக்கு உள்நாட்டில் நல்ல செல்வாக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் குவைத் போரின்போது ஏராளமான அப்பாவிகள் கொல்லப்பட்டதால், குறிப்பாக குழந்தைகள் பலர் கொல்லப்பட்டதால் அமெரிக்கர்களிடையே புஷ் சீனியருக்கு செல்வாக்கு குறைந்தது. இதனால்தான் 1992ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமல் போனது. பில் கிளிண்டன் பின்னர் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார்.
மகனும் அதிபர்
கிளிண்டனுக்குப் பிறகு அதிபரானவர் புஷ் சீனியரின் மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ். இவரது காலத்தில்தான் ஈராக் மீது அமெரிக்கா மிகப் பெரிய தாக்குதலைத் தொடுத்தது. சதாம் உசேன் வீழ்த்தப்பட்டு கடைசியில் தூக்கிலும் தொங்க விடப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் தந்தையும் - மகனும் அதிபராக இருந்தது 2 முறைதான் நடந்துள்ளது. முதல் தந்தை மகன் ஜோடி ஜான் குவின்சி ஆடம் - ஜான் ஆடம் ஆவர்.
வர்த்தகம்- அரசியல்
புஷ் குடும்பமே அரசியலும், வர்த்தகமும் கலந்தது. புஷ் சீனியரின் தந்தை பிரஸ்காட் புஷ் ஒரு வால் ஸ்டிரீட் வர்த்தகர் ஆவார். பின்னர் வங்கிப் பணிக்கு உயர்ந்தார். அதன் பின்னர் எம்பியாகவும் இருந்தார். தாயார் டோரத்தியும் வங்கிப் பணியாளர் ஆவார். புஷ் சீனியரின் மகன்களில் ஒருவரான ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தவர். இன்னொரு மகன் ஜெப் புஷ் மாகாண ஆளுநராக இருந்தவர்.