டிரம்பின் மூட்டை முடிச்சுகளை கட்டவைத்த பிடன்.. அடுத்து அமெரிக்க வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?
வாஷிங்டன்: அமெரிக்காவில் பங்குச் சந்தைகள் சிறப்பாக முன்னேறியிருந்தாலும் இனவெறுப்பு அதிகமாகி நாட்டில் இன ஒற்றுமை குறைந்து போனதற்கு டிரம்புதான் காரணம் என அமெரிக்க வாழ் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 273 இடங்களில் வெற்றி பெற்று ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே அதிபராக உள்ள டிரம்ப் 214 இடங்களை பெற்றார்.
இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் துணை அதிபராவதை அமெரிக்கா வாழ் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுகுறித்து அமெரிக்க வாழ் தமிழர் மணி குமரன் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக டிரம்பின் ஆட்சிக்காலத்தில் பங்குச் சந்தைகள் சிறப்பான முன்னேற்றத்தை கண்டாலும், இனவெறுப்பு அதிகமாகி நாட்டில் இன ஒற்றுமை குறைந்துபோக டிரம்ப் பெரும் காரணமாக இருந்தார்.
உலகையே வெல்லும் தமிழ் பெண்களின் வலிமையை கமலா ஹாரிஸ் நிரூபித்துள்ளார்.. ஓபிஎஸ் சூப்பர் வாழ்த்து
மோசமாக கையாண்ட டிரம்ப்
மக்களை எப்போதும் பிரித்து பேசி ஒருவரையொருவருக்கு எதிரியாக்கி, மக்களை ஒன்றுபடுத்துவதற்கு பதில் டிரம்ப் பிளவுபடுத்தினார். மேலும், அவர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை மிகவும் மோசமாக கையாண்டார். இருப்பினும், சீனாவுடனான பிரச்சனையை டிரம்ப் திறம்பட எதிர்கொண்டார்" என்றார்.
உதாரணம்
இதுகுறித்து ஆர் சி சரவணபவன் கூறுகையில் டிரம்ப் இனிமேல் நாட்டின் அதிபராக இருக்கமாட்டார் என்பது அமெரிக்காவுக்கு புதிய விடியல் போல் உள்ளது. நாட்டை பிளவுப்படுத்த முயன்ற டிரம்பின் நான்காண்டுகால ஆட்சி ஒரு கெட்ட கனவுபோல உள்ளது. இனி அமெரிக்கா எப்போதும்போல ஒற்றுமையுடன் உலகுக்கு உதாரணமான நாடாக திகழும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
புதிய அதிபர்
பென்சில்வேனியா மாகாணத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற மருத்துவரான சரோஜா கூறுகையில் "புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனும், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸும் திறம்பட நிர்வாகத்தை நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.
மக்களின் கடமை
அமெரிக்கா முழுவதும் வாழும் தமிழர்கள் உள்பட அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருவதோடு ஆதரவாகவும் இருக்கிறோம். எனினும், முறையாக வரியை செலுத்துவதும், தங்களது தேவைகளை புதிய அரசிடம் தெரிவித்து புரியவைப்பதும் மக்களின் கடமை" என்றார்.
மதவெறி
இனி அமெரிக்காவில் நிறவெறி, மதவெறி குறையும். செல்வந்தர்கள் வரி செலுத்துவார்கள். ஏழைகளுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வாழ்வு கிடைக்கும். பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் தேர்வு இன்றைய தினத்தை தீபாவளி போன்று உணர வைத்துள்ளதாக மேரிலாந்தை சேர்ந்த செல்வம் - ராஜி தம்பதியினர் தெரிவித்தனர்.