நீங்களா ரிசைன் பண்ணுங்க, இல்லனா நாங்க தூக்க வேண்டியதா இருக்கும்... டிரம்பை எச்சரிக்கும் சபாநாயகர்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையைத் தூண்டியதற்குப் பொறுப்பேற்று டிரம்ப் தாமாக முன் வந்து பதவி விலக வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். பைடனின் வெற்றியைத் தடுக்க அதிபர் டிரம்ப், கடைசி வரை பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இருப்பினும், எதிலும் பலன் கிடைக்கவில்லை.
பைடனின் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒன்று கூடியபோது, டிரம்பின் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஐந்து பேர் வரை உயிரிழந்தனர்.
அமெரிக்கக் கலவரம்
இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. வரும் 20ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ளார். டிரம்ப் இன்னும் சில நாட்களே அதிபர் பதவியில் இருக்கப்போகிறார். இருப்பினும், அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
நீங்களா ரிசைன் பண்ணுங்க
இந்நிலையில், டிரம்ப் அதிபர் பதவியிலிருந்து தாமாக விலக முன்வரவில்லை என்றால் அவரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்தி டிரம்பை முன்கூட்டியே அதிபர் பதவியிலிருந்து நீக்க முடியும். இது மட்டுமின்றி அதிபரைப் பதவி நீக்கம் செய்ய இருக்கும் அனைத்து வழிகள் குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவைப் பாதுகாப்பற்ற நாடாக மாற்றுகிறார்
டிரம்ப் மீது பதவி நீக்க மசோதாவை முன்மொழிந்த அமெரிக்க எம்பி கயாலி கஹலே இது குறித்துக் கூறுகையில், "மக்களிடையே வன்முறையைத் தூண்டும், தேர்தல் முடிவுகளை நம்பாத ஒருவர் அதிபராக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோபத்தைத் தூண்டும் விதமாக அவர் பேசியதன் விளைவாக ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாதது. டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் அமெரிக்கா பாதுகாப்பற்றதாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.
சட்டத்திற்கு மேல் மீறி யாருமில்லை
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்காக டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்நாட்டு எம்பிகள் சபாநாயகர் நான்சி பெலோசியிடம் கடிதம் வழங்கியுள்ளனர். அதில், "அமெரிக்காவில் சட்டத்திற்கு மேல் மீறி யாரும் இல்லை என்பதை நாம் காட்ட வேண்டும். இந்த அபாயகரமான நேரத்தில் நமது நாட்டையும் நமது ஜனநாயகத்தையும் பாதுகாக்க டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்டால் என்ன நடக்கும்
டிரம்பை அதிபர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கான மசோதா வரும் திங்கட்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைடன் அதிபராகப் பதவியேற்பதற்கு முன்னரே டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்படும்பட்சத்தில், தற்போது துணை அதிபராகவுள்ள மைக் மென்ஸ் எஞ்சிய காலத்திற்கு அதிபராக செயல்படுவார்.