ஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்? மோடி கேள்வி
வாஷிங்டன்: இன்னும் எத்தனை காலம்தான் இந்தியாவை ஐ.நாவின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து இந்தியாவை தள்ளி வைப்பீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75 ஆவது கூட்டத் தில் காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் கூறியதாவது:
தடுப்பூசி தயாரிப்பில் உலகிலேயே மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்கி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் உலக நாடுகளுக்கு நான் ஒரு வாக்குறுதியை வழங்க விரும்புகிறேன். இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகம் கட்டமைப்பு கொரோனா வைரஸ் பிரச்சினைகளிலிருந்து உலக நாடுகளை காப்பாற்ற உதவும்.
9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன? மோடி 'நறுக்' கேள்வி
குரல் எழுப்பும்
மனிதகுலத்துக்கு எதிரான விஷயங்களுக்கு எதிராக குரல் எழுப்ப, இந்தியா ஒருபோதும் தயங்காது. அது தீவிரவாதமாக இருந்தாலும் சரி.. சட்டவிரோத ஆயுதக் கடத்தலாக இருந்தாலும், போதை பொருளாக இருந்தாலும், சட்டவிரோத பண பரிவர்த்தனையாக இருந்தாலும், அவற்றுக்கு எதிராக எல்லாம் இந்தியா குரல் எழுப்பும். வரும் ஜனவரி மாதம் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அல்லாத நாடாக தனது பங்களிப்பை துவங்க உள்ளது. அப்போது இந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவோம்.
இந்தியா சாதனை
400 மில்லியன் மக்களை வங்கி கட்டமைப்பில் இணைப்பது சாதாரண விஷயம் கிடையாது ஆனால் இந்தியா வெறும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டிவிட்டது. டிஜிட்டல் முறையில், பணபரிவர்த்தனை செய்யக்கூடிய முன்னணி நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியா எப்போதும் அமைதி பாதுகாப்பு மற்றும் வல்லமை ஆகியவற்றுக்கு ஆதரவாக இருக்கும். கொரோனா நோய்த்தொற்று காலத்திற்கு பிறகு நாங்கள் சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
உலகமே ஒரு குடும்பம்
உலகமே ஒரு குடும்பம் என்பது இந்தியாவின் அடிப்படை தத்துவம். ஐக்கிய நாடுகள் சபை இதே நோக்கத்துக்காக தான் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 150 மில்லியன் வீடுகளுக்கு குழாய் மூலமாக குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தை துவங்கி உள்ளோம். சில நாட்களுக்கு முன்பாக 6 லட்சம் கிராமங்களை ஆப்டிகல் பைபர் பிராட்பேண்ட் மூலமாக இணையதள சேவை வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.
நிரந்தர உறுப்பு நாடு
ஐ.நா.வில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு பங்கு கிடையாதா? நாங்கள் பலவீனமாக இருந்த போது எந்த நாட்டுக்கும் பாரமாக இல்லை. நாங்கள் பலமாக மாறிவிட்ட பிறகு எந்த நாட்டுக்கும் தொந்தரவு செய்யவில்லை. அப்படியிருந்தும் எதற்காக இந்தியா இன்னும் காத்திருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைக்கு இந்தியா தனது ராணுவ வீரர்களை அனுப்பி வைத்தது. அதில் பல ராணுவ வீரர்களை இழந்தது. எப்போதுமே உலக நாடுகளின் நன்மையைப் பற்றி யோசிக்கக் கூடிய நாடு இந்தியா. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தார். அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன்,பிரான்ஸ் ஆகியவை நிரந்த உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்தியாவிற்கும் இந்த அந்தஸ்து தரப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இதுவரை அந்த அந்தஸ்தை இந்தியா பெற முடியவில்லை. சீனாவின் முட்டுக்கட்டைகளும் இதற்கு காரணம். இந்த நிலையில்தான் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.