50 ஆண்டு ரெக்கார்ட் காலி.. சாதனை படைத்த ஓரியன் விண்கலம்.. அசத்தும் நாசா! வியக்கும் உலக நாடுகள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ள ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இப்போது மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக நாசா ஆர்டெமிஸ் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் கடந்த சில நாட்களுக்கு முன், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அது இப்போது நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
வருவார்.. ஆனால் வரமாட்டார்.. அமித்ஷா, நட்டாவை வைத்து ‛கேம்’ ஆடிய பாஜகவினர்.. குஜராத்தில் ஆக்ரோஷம்
அமெரிக்கா
பூமியில் இருந்து மனிதர்களை முதல்முறையாக நிலவுக்கு அனுப்பி வைத்தது அமெரிக்கா தான். கடந்த 1960களின் பிற்பகுதியில் அப்பல்லோ விண்வெளி திட்டத்தின் மூலம் மனிதர்கள் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கினர். இது மனிதக் குலத்திற்கு வரலாற்று ரீதியாக முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இப்போது மீண்டும் அதே முயற்சியை நாசா தொடங்கி உள்ளது. இதற்காகத் தான் ஆர்டெமிஸ் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
புதிய சாதனை
சுமார் 50 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சியின் முதல்படியாக ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மூலம் ஆளில்லாத சாட்டிலைட்டை கடந்த வாரம் நாசா அனுப்பியது. இந்த ஓரியன் காப்ஸ்யூல் இப்போது சுமார் பூமியில் இருந்து சுமார் 4,01,798 கிமீ தொலைவிற்குச் சென்றுள்ளது. மனிதர்களைத் தாங்கிச் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட விண்கலம் ஒன்று பூமியில் இருந்து இவ்வளவு தூரம் செல்வது இதுவே முதல்முறையாகும்.
அப்பல்லோ 13
இதற்கு முன்னர் நாசாவின் அப்பல்லோ 13 விண்கலம் கடந்த 1970 ஏப்ரல் 14ஆம் தேதி பூமியில் இருந்து அதிகபட்சமாக 4,00,171 கிமீ சென்றிருந்ததே சாதனையாக இருந்தது. சொல்லப்போனால் அப்பல்லோ 13 அவ்வளவு தூரம் பயணிப்பதைப் போல வடிவமைக்கப்பட்டு இருக்கவில்லை. விண்வெளி வீரர்களுடன் சென்ற அந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்குவது தான் அதன் முதன்மை திட்டம். இருப்பினும், புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த விண்கலத்தில் சேதம் ஏற்பட்டது. இதனால் நிலவில் தரையிறங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
என்ன நடந்தது
விண்வெளி வீரர்கள் அந்த விண்கலத்தில் இருந்தார்கள் என்பதால், அவர்களைப் பாதுகாப்பாகப் பூமிக்கு அழைத்து வருவதில் கவனம் செலுத்தப்பட்டது. பழைய முறைப்படி அப்பல்லோ 13ஐ பூமிக்கு வரவழைக்க வேண்டும் என்றால் அதற்கு, அதிக நேரம் ஆகும். ஏற்கனவே, விண்கலம் சேதமடைந்திருந்ததால் அந்த ரிஸ்கை எடுக்க நாசா தயாராக இல்லை. இதையடுத்து நிலவின் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி ஸ்லிங்ஷாட் போல அதைச் சுற்றிச் சென்று, விரைவாகப் பூமிக்குத் திரும்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே அப்பல்லோ 13 விண்கலம் பூமியில் இருந்து அந்தளவு தூரத்திற்குச் சென்றது.
சாதனை முறியடிப்பு
அதேபோல இப்போது விண்ணில் அனுப்பப்பட்ட ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் கேப்ஸ்யூலும் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் ஏவப்பட்டது இல்லை. நாசா இந்த காப்ஸ்யூலை தொலைதூர சுற்றுப்பாதையில் அனுப்பியதாலேயே இது நடந்தது. இதன் மூலம் சுமார் 52 ஆண்டுகளாக இருந்த அப்பல்லோவின் சாதனை இப்போது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு உள்ளது இது குறித்து ஓரியன் விண்கல ஒருங்கிணைப்பு மேலாளர் நாசாவின் ஜிம் கெஃப்ரே கூறுகையில், "புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் விண்கலத்தை அனுப்பவில்லை. அந்தப் பெரிய சுற்றுப்பாதையில், சந்திரனுக்கு மேல் உயரத்தில் இருந்ததால், அப்பல்லோ 13 சாதனையை எங்களால் கடக்க முடிந்தது.
சுவரஸியம்
ஆனால் இதையும் தாண்டி முக்கியமானது என்னவென்றால், மனிதர்களால் அதிக தூரம் பயணிக்கக் கூடிய விண்கலத்தை உருவாக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது" என்றார். ஓரியன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் யாரும் இல்லை. எனவே, விண்வெளி வீரர்களுடன் அதிக தூரம் சென்ற காப்சியூல் என்ற சாதனையை அப்பல்லோ 13 விண்கலத்திடம் தான் இன்னும் கூட உள்ளது. அப்பல்லோ13 விண்கலத்தில் பிரச்சினை ஏற்பட்ட போது, அது பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்ப போதுமான சக்தி இருப்பதை உறுதி செய்தவர் ஆர்டுரோ காம்போஸ் என்ற பொறியாளர். அவரின் நினைவாக இந்த ஓரியன் காப்சியூல் "கமாண்டர் மூனிகின் காம்போஸ்" என்ற ஒரு கருவியையும் சுமந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
நாசா திட்டம்
இந்த காப்சியூல், நிலவில் இருந்து திரும்பி வரும் டிசம்பர் 11 பசிபிக் கடலில் விழும். அடுத்து ஆர்டெமிஸ்-2 ராக்கெட் மூலம் அடுத்தாண்டு மனிதர்கள் விண்வெளிக்குச் செல்வார்கள். இருப்பினும், அதிலும் அவர்கள் விண்வெளியில் தரையிறங்க மாட்டார்கள் இந்த ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்கள், சந்திரனைச் சுற்றி ஓரியனில் காப்ஸ்யூலில் இருந்தபடியே சுற்றிவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள். இந்த இரண்டும் வெற்றிகரமாக முடிந்த பின்னர் தான் மனிதர்கள் நிலவுக்கு நாசா மீண்டும் அனுப்பும். வரும் 2025இல் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.