இந்தியாவின் அழகே பல மொழியும், கலாச்சாரமும்தான்.. அமெரிக்காவில் மோடிக்கு ஏற்பட்ட திடீர் மனமாற்றம்
Recommended Video
வாஷிங்டன்: இந்தி மொழி தான் தேசிய மக்களை இந்திய நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் என்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், வேற்றுமையில் ஒற்றுமை, பல மொழி கலாச்சாரம் என்பது நாட்டின் அடையாளம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நேற்று ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் ரொனால்ட் முதல் முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் மேடையை பகிர்ந்து கொண்டது இது தான் முதல் முறை என்பதால், உலகம் முழுக்க ஹவுடி மோடி நிகழ்வு, உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
தீவிரவாதம்
இந்த நிகழ்ச்சியில் தீவிரவாதம், பாகிஸ்தானின் அடாவடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மோடி தனது உரையில் குறிப்பிட்டு பேசினார். அமெரிக்காவின் உற்ற நண்பன் இந்தியா என்று டிரம்ப் வர்ணித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு கூட்டம் போல இதை ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் உண்மை.
பல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு
அமித் ஷா
மற்றொரு பக்கம், நரேந்திரமோடியின் உரையில் முக்கியமான அம்சம் கவனிக்கப்படுகிறது. அது இந்திய நாட்டின் பல மொழி கலாச்சாரம், வேற்றுமையில் ஒற்றுமை தொடர்பாக பிரதமர் வெளிப்படுத்திய பெருமை பெருமிதம் தான். இவரது இந்த கருத்து, அமித் ஷா தெரிவித்த கருத்தில் இருந்து நேர் எதிரில் இருந்தது தான் தற்போது கவனத்தை ஈர்க்க காரணமாகியுள்ளது.
எல்லாம் நலம்
பார்வையாளர் பகுதியில் டொனால்ட் ட்ரம்ப் அமர்ந்திருந்தபோது, இந்தியாவில் அனைத்தும் சௌக்கியமாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகளில் பேசினார். மேலும் இது தொடர்பாக மோடி பேசியதாவது: எனது அமெரிக்க நண்பர்கள் நான் என்ன சொன்னேன் என்பது புரியாமல் இருந்திருக்கலாம். அனைத்தும் நலம் என்று நான் இந்தியாவின் பல மொழிகளை பயன்படுத்தி கூறினேன்.
தனிச்சிறப்புள்ள நாடு இந்தியா
இவையெல்லாம் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் கூடிய மொழிகள். இந்திய நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றின் அடையாளம் இந்த மொழிகள். பல்வேறு மொழிகள் பேசும் மக்களுடன் இணக்கமாக இருந்தபடி பல நூறு ஆண்டுகளாக எங்களது தேசம் முன்னேற்ற பாதையில் நடை போட்டு வருகிறது. இப்போதும்கூட இந்த மொழிகள், பல கோடி மக்களின் தாய் மொழியாக இருந்து வருகிறது. வெறும் மொழிகளால் மட்டும் கிடையாது, உணவு பழக்க வழக்கம், தட்பவெப்பம் போன்றவற்றாலும் பல்வேறு வேற்றுமைகளை கொண்ட நாடு இந்தியா. ஆனால் எத்தனை வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமையையாக வாழ்வது, என்பது இந்தியர்களின் இலக்கணம். இதன் மூலம் உலகின் தன்னிகர் இல்லாத தனிச்சிறப்பு மிக்க நாடாக இந்தியா விளங்குகிறது. இவ்வாறு மோடி பேசினார்.
வெற்றி
அமெரிக்காவில் இந்திய சமூகத்தினர் பல மொழி பேசக்கூடிய மக்களும் வசிக்கிறார்கள். அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மோடி இவ்வாறு பேசி இருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு இந்தி மொழி அவசியம், தேசிய மொழியாக அனைத்து தகுதியும், இந்தி மொழிக்கு இருக்கிறது என்று அமித் ஷா கூறிய கருத்தில் இருந்து நேர் எதிர் கருத்தை மோடி தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இந்தி திணிப்புக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அவர் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்று அமித் ஷா விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையை கட்டுப்படுத்துவதற்காக, வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை நரேந்திர மோடி உச்சரிக்க தொடங்கி உள்ளார் என்று கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதன் மூலம் இந்தி மொழி தொடர்பான தனது முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கி விட்டதாக தெரிகிறது. இது தங்கள் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட.., அதேநேரம் இந்திய ஒருமைப்பாட்டை ஒரு காலத்திலும் விட்டுத் தராத தமிழகம் உள்ளிட்ட பிற மொழி பேசக்கூடிய அனைத்து மாநில மக்களுக்கும் ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது.