இது ஒரு புரளி.. ஏமாற்று வேலை.. பதவி நீக்க நடவடிக்கை விசாரணை குறித்து கொதிக்கும் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு எதிராக செனட் சபையில் நடைபெற உள்ள பதவி நீக்க நடவடிக்கை விசாரணையை மோசடி என்று நிராகரித்துள்ளார்.. தன் மீதான குற்றச்சாட்டு வழக்குகள் விரைவில் முடிவடையும் என்றும் கணித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற உக்ரைனின் உதவியை நாடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த மசோதா செனட் சபையில்நிறைவேற்றப்பட்டால் டிரம்ப் பதவியில் இருந்து நீக்கப்படுவார். ஆனால் அதற்கு வாய்ப்புகள் இல்லை.
சொந்தகட்சியினரே
ஏனெனில் டிரம்பின் சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக திரும்ப வேண்டும். அப்படி திரும்பினால் தான் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் டிரம்ப் பதவி நீக்கப்படுவார். அதாவது மூன்றில் இரண்டு பங்கு செனட்டர்களின் பெரும்பான்மை இருந்தால்தான் டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
21ம் தேதி விசாரணை
இதனிடையே அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கைக்காக அமெரிக்க செனட் சபையினர் 100 பேர் நீதிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர். அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்பு "பாரபட்சம் இல்லாத நீதியை" வழங்குவோம் என்று செனட் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றிருக்கிறார்கள். டிரம்புக்கு எதிரான விசாரணை ஜனவரி 21ஆம் தேதி தொடங்க உள்ளது.
இது ஒரு மோசடி
இந்நிலையில் அதிகாரத்தை பெறுவதற்காக உக்ரைனின் உதவியை நாடியதாக கூறப்படும் தன் மீதான குற்றச்சாட்டுகளை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். இது ஒரு மோசடி என்று குற்றம்சாட்டி உள்ளார்.
டிரம்ப் நம்பிக்கை
டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கைக்காக அமெரிக்க செனட் சபையினர் 100 பேர் நீதிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்பு வைபவம் நடந்த நிலையில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இது மிக விரைவாக முடியும் என்று நினைக்கிறேன். செனட் சபையில் நிச்சயம் நிராகரிக்கப்படும்.
ஏமாற்றுவேலை
இது முற்றிலும் பாகுபாடானது. இது ஒரு புரளி. ஒரு முழுமையான ஏமாற்றுவேலை என்று அனைவருக்கும் தெரியும் என்றார். அவரது தனிப்பட்ட வழக்கறிஞர் ரூடி கியுலியானியின் மீது உக்ரைன் விவகாரம் குறித்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களுடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று டிரம்ப் கூறினார்.