இந்தியாவில் காற்று மாசு எவ்வளவு இருக்கு பாருங்க.. மீண்டும் கேவலப்படுத்திப் பேசிய டிரம்ப்!
வாஷிங்டன்: இந்தியாவில் காற்று மாசு ரொம்ப அதிகம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது வாத நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே இன்று டென்னசிலுள்ள நாஷ்வில்லி பல்கலைக்கழகத்தில், நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது சர்வதேச விவகாரங்கள், கொரோனா வைரஸ் நோய் பரவல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர்.
இவ்வளவு பேசுகிறீர்களே 8 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்... ஜோ பிடனுக்கு டிரம்ப் சரமாரி கேள்வி..!
இந்தியாவை பாருங்கள்
டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது பற்றியும் அப்போது விவாதம் செய்யப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது: சீனாவைப் பாருங்கள் எவ்வளவு தூய்மையற்ற நாடு. ரஷ்யாவை பாருங்கள், இந்தியாவை பாருங்கள். அவர்களின் காற்று மிகவும் மாசு அடைந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக டிரம்ப்
ஆனால் அமெரிக்காவுக்கு தான் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. எனவே தான் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவை நான் எடுத்தேன். நமது டிரில்லியன் கணக்கான பணம் பயன்படுத்தப்பட்ட போதிலும் நம்மை வேறு மாதிரியாகத்தான் நடத்தினார்கள் என்று தெரிவித்தார். கடந்த முறை நடந்த அதிபர் டிபேட் நிகழ்ச்சியில், இந்தியாவில், சீனாவில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டினார் ட்ரம்ப். இப்போது மறுபடியும் இந்தியாவை வம்புக்கு இழுத்துள்ளார்.
வேலை வாய்ப்பு
மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கர்களின் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை நான் தியாகம் செய்ய மாட்டேன். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் காரணமாக அமெரிக்காவில் பல தொழில் நிறுவனங்களால் தொழில் துவங்க முடியவில்லை. ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் அமெரிக்காவில் அதிகமாக தொழில் துவங்கப்படும். அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நட்பு நாடுதானே
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை நியாயம் கற்பிப்பதற்காக டிரம்ப் இவ்வாறு பேசினாலும், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை அவர் ஒப்பீடு செய்து இருக்கலாமே தவிர, நட்பு நாடான இந்தியாவை அவர் வம்புக்கு இழுப்பதை இந்திய சமூகம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜோ பிடனுக்கு ஆதரவு
ஏற்கனவே எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளில் அமெரிக்க வாழ் இந்திய சமூகம் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்தது. ஏனெனில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் காற்று மாசு அடைந்துள்ளதாக வம்பு செய்துள்ளார்.
காற்று மாசு
2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிக்கையின்படி உலகத்திலேயே அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. சீனா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் அமெரிக்கா, பிறகு ஐரோப்பிய யூனியன் என இவைதான் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.