கொரோனாவை தடுக்க.. தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது இந்தியா... பாராட்டி தள்ளும் சர்வதேச நிதியம்
வாஷிங்டன்: கொரோனா வைரசையும் அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளையும் சமாளிக்க இந்தியா "மிகவும் தீர்க்கமான" நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகச் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்தக் கடும் ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்திய பொருளாதாரம் 10.3% வரை சரிவைச் சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தது. இருப்பினும், 2021ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் சுமார் 8.8% வரை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பாராட்டு
இந்நிலையில், கொரோனா பாதிப்பைச் சமாளிப்பதிலும் இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைச் சமாளிப்பதிலும் இந்தியா தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகச் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டியுள்ளார். மேலும், வரும் ஜனவரி 26ஆம் தேதி சர்வதேச பொருளாதாரம் குறித்து புதிய அறிக்கையைச் சர்வதேச நிதியம் வெளியிடவுள்ளதாகவும் அது இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் ஊரடங்கு
மேலும், ஊரடங்கு குறித்துப் பேசிய அவர், "அதிக மக்கள் வாழும் இந்தியாவில் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தது. சில மாதங்களுக்குப் பின்னரே இந்தியா ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. தேவையான கொள்கைகளும் அறிவிக்கப்பட்டதால் இந்தியா பொருளாதாரம் தற்போது கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது.
பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்
கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பணப் புழக்கத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பாராட்டத்தக்கது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சராசரியாக வளரும் நாடுகளைவிட அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மற்ற வளரும் நாடுகள் தங்கள் ஜிடிபியில் ஆறு சதவீதத்தை ஊக்குவிப்பு திட்டமாக அறிவித்துள்ளன. ஆனால், இந்தியா 10 சதவீதத்தை ஊக்குவிப்பு திட்டமாக அறிவித்துள்ளது" என்றார்.
பாராட்டத்தக்கது
மேலும், இந்தியா தனது கட்டமைப்பை மாற்ற எடுத்து வரும் நடவடிக்கைகளும் பாராட்டும் வகையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது போன்ற மாற்றங்களே உற்பத்தியை அதிகரித்து, நாட்டை வலுவான பொருளாதாரமாக மாற்றும் என்றும் அவர் கூறினார். கொரோனா பொருளாதார பாதிப்பால் முதலில் வேலையிழந்தது பெண்கள்தான் என்று குறிப்பிட்ட கிறிஸ்டலினா ஜார்ஜீவா, இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.