உலக கோப்பை ஃபைனலில் மோதப்போவது எந்த டீம்கள்? சுந்தர் பிச்சை சூப்பர் கணிப்பு
Recommended Video
வாஷிங்டன்: நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், யார் பைனலில் விளையாடுவார்கள் என்று கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் ஜுரம், உலக கிரிக்கெட் ரசிகர்களை சூடேற்றியுள்ளது. என்ன ஒன்னு.. அப்பப்போ மழை பெய்து, அந்த சூட்டை தணிக்கிறது. இருந்தாலும் வேட்கை தணியவில்லை.
சூட்டோடு சூடாக சுந்தர் பிச்சையும், உலக கோப்பை கிரிக்கெட் பற்றி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். வாஷிங்டனில் இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாடு நிகழ்ச்சியில், சுந்தர் பிச்சை இதுபற்றி பேசியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து
இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், மைக் போம்பியோ, இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவன உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சுந்தர் பிச்சை பேசியதை பாருங்கள்: உலக கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தும் சிறந்த அணிகளாக இருப்பதை மறுக்க முடியாது.
பேஸ்பால்
நான் தீவிரமான கிரிக்கெட் ரசிகன். அமெரிக்காவுக்கு நான் முதலில் வந்தபோது, இங்குள்ள பேஸ்பால் கலாச்சாரத்தை சற்று சவாலாகவே எதிர்கொள்ள நேர்ந்தது. பேஸ்பால் விளையாட்டில் என்னை ஈடுபடுத்த முயன்றேன். எனது முதல் போட்டியில், நான் பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு ஒரு நிகழ்வு நடைபெற்றது. சரியாக நான் பந்தை ஹிட் செய்தேன். கிரிக்கெட்டில் அது ஒரு சிறந்த ஷாட்டாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் மக்கள் என்னை பாராட்டவில்லை.
சவாலான விஷயம்
கிரிக்கெட்டில் பேட்டை நம்முடனே தூக்கிச் செல்வோம். அதேபோல பேஸ்பால் விளையாடும்போதும் தூக்கிக்கொண்டு ஓடியுள்ளேன். எனவே அது எனக்கு சற்று சவாலான விளையாட்டாகவே இருந்தது என்று புன்முறுவலுடன் கூறினார் சுந்தர் பிச்சை.
நன்கு ஆடுகிறது
இப்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இது ஒரு சிறந்த தொடர். இந்தியா இந்த தொடரில் நன்கு ஆடுகிறது. ஆனால், பல அணிகளும் கடும் போட்டியை கொடுக்கின்றன என்றார் சுந்தர் பிச்சை நிறைவாக.