அலங்கரிக்கப்பட்ட கார்களில் ஒரே கூடத்தில் கூடினர்.. அசத்தலாக தீபாவளி கொண்டாடிய அமெரிக்க இந்தியர்கள்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத் தலைநகர் சாக்ரமெண்டோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள், இணைந்து சிறப்பாக தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா நோய் பரவல் ஒரு பக்கம் இருந்தாலும், அமெரிக்க-இந்தியர்களின் தீபாவளி கொண்டாட்டம் இனிதே நடந்தேறியுள்ளது. அதிலும், சாக்ரமெண்டோ நகரின் அருகேயுள்ள ரோசவில்லே பகுதியில், 100க்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள் இணைந்து தீபாவளியை கொண்டாடினர்.
நவம்பர் 8 மாலை 6 மணிக்கு இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்த மக்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர், ஆரவாரம் செய்து, அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் தங்கள் கார்களுடன் அணி வகுத்தனர். இதன் காரணமாக, சமூக இடைவெளியை பின்பற்றுவது போலவும், அதேநேரம் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதைப்போலவும் ஆயிற்று. பல உள்ளூர் அமெரிக்கர்களும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்தனர்.
100 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவு கடுமையான குளிரான தட்பவெப்பம் இருந்தபோதிலும், மக்கள் சாக்ரமெண்டோ புறநகர் பகுதிகளான எல்க் க்ரோவ், ஃபோல்சம், ஆரஞ்வேல், ராஞ்சோ, ராக்லின், மற்றும் ரோஸ்வில்லி ஆகிய இடங்களிலிருந்து வந்தனர்.
வண்ணமயமான எல்.ஈ.டி விளக்குகளால் தங்கள் கார்களை அலங்கரிக்க அவர்கள் மணிக்கணக்கில் செலவிட்டனர் என்றால் அவர்கள் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சியின்போது சாக்ரெண்டோ சேவா அமைப்புக்கு 50 பவுண்டுக்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் நன்கொடையாக வந்தன. உள்ளூர் ரிலையன்ஸ் சூப்பர் மார்ட், இந்த பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தது.