திருச்சி டூ அமெரிக்கா.. கம்மி விலையில் கொரோனா வென்டிலேட்டர்கள்.. குமுதா தம்பதி ஹேப்பி அண்ணாச்சி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய தம்பதி, கொரோனா நோயாளிகளின் வசதிக்காக குறைந்த விலை வென்டிலேட்டர்களை உருவாக்கி பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.
இது ஒரு அவசர கால வென்டிலேட்டர் ஆகும். மிகவும் குறைந்த செலவில் இதை உருவாக்க முடியும். மார்க்கெட் விலையை விட பல மடங்கு குறைவும் கூட. இதுதான் டாக்டர் குமுதா ரஞ்சன் மற்றும் அவரது கணவர் பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன் தம்பதி செய்துள்ள சாதனையாகும்.
ஆய்வு கட்டத்தைத் தாண்டி விரைவில் இது உற்பத்தி நிலையை எட்டவுள்ளது. இந்த குறைந்த விலை வென்டிலேட்டர்கள் இந்தியாவிலும், இதர வளரும் நாடுகளிலும் கூட விற்பனைக்கு வரவுள்ளது என்பது நமக்கும் கூட மகிழ்ச்சியான செய்திதான்.
சென்னையில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு மரணம்.. எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை.. இறப்பின் பின்னணி
கொரோனா பரவல் தீவிரம்
கொரோனாவைரஸ் உலகையே உலுக்கி எடுத்து வருகிறது. வல்லரசு, சிற்றரசு என யாரையும் இது விட்டு வைக்கவில்லை. அனைவரையும் உண்டு இல்லை என்று செய்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்த வென்டிலேட்டர் கண்டுபிடிப்பு செய்தி வந்துள்ளது. கொரோனா போரில் வென்டிலேட்டர்களின் பங்கு மிக மிக முக்கியமானது. கொரோனாவைரஸ் நுரையீரலைக் குறி வைக்கும் நோய் என்பதால் வென்டிலேட்டர்கள் இல்லாமல் சிகிச்சை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.
வென்டிலேட்டர் ரொம்ப முக்கியம்
பல நாடுகளில் வென்டிலேட்டர் வசதி இல்லாமல் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதால் வென்டிலேட்டர்களை இருப்பில் வைத்துக் கொள்வதில் பல நாடுகள் அக்கறை காட்டி வருகின்றன. ஆனால் அதன் விலை அதிகம் இருப்பதால் பல நாடுகளில் இதுதொடர்பான பற்றாக்குறை பிரச்சினைகளும் தலைவிரித்தாடுகின்றன. இதை கருத்தில் கொண்டே குறைந்த விலையிலான வென்டிலேட்டர்களை குமுதா - தேவேஷ் ரஞ்சன் தம்பதி உருவாக்கியுள்ளது.
ஜார்ஜியா டெக் கல்லூரி பேராசிரியர்
புகழ் பெற்ற ஜார்ஜியா டெக் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் தேவேஷ் ரஞ்சன். இவரது மனைவி குமுதா அட்லாண்டாவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பொறியாளர் மற்றும் மருத்துவரான இந்த தம்பதி இணைந்து இந்த குறைந்த விலை வென்டிலேட்டர்களை உருவாக்கியுள்ளனர். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது மிகவும் பேருதவியாக இருக்கும். 3 வாரத்திலேயே இந்த மொபைல் வென்டிலேட்டர்களின் மாதிரியை இத்தம்பதி உருவாக்கியுள்ளது.
7600 ரூபாய்தான்
இதுகுறித்து தேவேஷ் ரஞ்சன் கூறுகையில், இந்த குறைந்த விலை வென்டிலேட்டர்களை அமெரிக்க மதிப்பின்படி 100 டாலர்களுக்குள் உருவாக்க முடியும். இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 7600 வரும். தற்போது அமெரிக்காவில் இந்த வகை வென்டிலேட்டர்களின் விலை சராசரியாக ரூ. ஏழரை லட்சமாக இருக்கிறது என்றார் தேவேஷ் ரஞ்சன்.
சூப்பர் கண்காணிப்பு
நுரையீரலை ஒரு நோய் பாதித்து அது செயல்படுவதில் சிக்கல் வரும்போது நுரையீரல் செய்ய வேண்டிய வேலையை இந்த வென்டிலேட்டர் செய்யும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது சுலபமாகும். அந்த நோய்த் தொற்று நீங்கும் வரை வென்டிலேட்டர்தான் அந்த நோயாளியின் நுரையீரலாக செயல்படும். கொரோனாவைரஸ் போன்ற நுரையீரல் தொற்று நோய்க்கு வென்டிலேட்டர்கள் மிக மிக அவசியம் என்பதால் வென்டிலேட்டர்களின் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.
ஐசியூ வென்டிலேட்டர் அல்ல
அதேசமயம், குமுதா - தேவேஷ் தற்போது தயாரித்துள்ள வென்டிலேட்டரானது மிகவும் சாதாரண ஒன்றுதான், ஐசியூ வென்டிலேட்டர் அல்ல. இது மிகவும் விலை உயர்ந்தது. தயாரிப்புக்கும் அதிக செலவாகும். குமுதா தம்பதியினர் உருவாக்கியுள்ளது அவசர காலத்துக்கு உதவும் மொபைல் வென்டிலேட்டர். முதல் கட்ட அவசரத்துக்கு இது கை கொடுக்கும். கிட்டத்தட்ட முதலுதவி சாதனம் போல.
முதலுதவியாக இருக்கும்
குமுதா தம்பதியினர் உருவாக்கியுள்ள வென்டிலேட்டரின் பெயர் ஓபன்-ஏர்வென்ட்ஜிடி. கொரோனாவைரஸ் தாக்குதலில் பாதிக்கப்படும் நோயாளியின் நுரையீரல் இறுகி மூச்சுத் திணறல் ஏற்படும். அந்த சமயத்தில் வென்டிலேட்டர் உதவியின் மூலமாகத்தான் அவர்களால் சுவாசிக்க முடியும். அந்த வேலையைச் செய்வதே குமுதா தம்பதி உருவாக்கியுள்ள வென்டிலேட்டரின் பணியாகும். ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
சென்சார் மூலம் கண்காணிப்பு
சுவாச அளவு, நுரையீரலுக்கு காற்று செல்லும் விகிதம், வெளியேறும் காற்றின் விகிதம், மூச்சு விடுவது, மூச்சு இழுப்பது, நுரையீரலின் அழுத்தம் ஆகியவற்றை அளவிடுவதை எலக்ட்ரானிக் சென்சார்கள் மூலம் கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்க இந்த வென்டிலேட்டர் உதவும். டாக்டர் குமுதா கூறுகையில், உடனடியாக வென்டிலேட்டர் தேவைப்படும் நோயாளிகளுக்கு இது உதவும். தற்காலிக ஏற்பாடாக இது அமையும். நோயாளியின் நிலை மோசமாகி விடாமல் உடனடியாக தடுப்பதோடு, அடுத்த கட்ட சிகிச்சைக்கு அவரை மாற்றுவதற்கும் இந்த தற்காலிக வென்டிலேட்டர் ஒரு பாலமாக இருக்கும்.
இருப்பில் வைப்பது அவசியம்
உலகம் முழுவதும் கொரோனாவைரஸ் வேகமாக பரவி வருவதால் வென்டிலேட்டர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். எனவே அதிக அளவில் அதை குறைந்த விலையில் தயாரித்து இருப்பில் வைத்துக் கொள்வது அவசியம் என்றார் டாக்டர் குமுதா. உலக அளவில் கொரோனாவுக்கு இதுவரை மூன்றே முக்கால் லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 98,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் தற்போது கொரோனாவைரஸ் பரவல் வேகம் பிடித்துள்ளது. ஜூன் - ஜூலையில் அது உச்சத்தை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.
திருச்சியில் படித்தவர்
தேவேஷ் ரஞ்சன் பீகாரைச் சேர்ந்தவர். திருச்சியில் உள்ள பிராந்திய பொறியியல் கல்லூரியில்தான் படித்தார். அதேசமயம், குமுதா ரஞ்சன் ராஞ்சியைச் சேர்ந்தவர். இவருக்கு ஆறு வயதாகும்போது இவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தனர். இருவரும் அமெரிக்காவில் சந்தித்தபோது காதல் கொண்டு பின்னர் மணம் புரிந்து கொண்டனர். விரைவில் உலக அளவில் மலிவு விலை வென்டிலேட்டர் தயாரிப்பில் இந்தியா முன்னணி இடத்தைப் பெறும் என்றும் இந்தத் தம்பதியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.