கொரோனா சிகிச்சை.. அமெரிக்க, இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல் கண்டுபிடிப்பு.. 25,000 டாலர் பரிசு
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பாக இந்திய-அமெரிக்க 14 வயது இளம் பள்ளி மாணவி செய்த ஆய்வுக்காக பரிசு கிடைத்துள்ளது 25,000 டாலர் வழங்கப்பட்டுள்ளது.
டெக்சாஸைச் சேர்ந்த 14 வயதான அனிகா செப்ரோலு, 8வது வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட புரதத்துடன் பிணைக்கப்பட்டு, அந்த வைரஸ் செயல்படுவதைத் தடுக்கக்கூடிய ஒரு மூலக்கூறை அனிகா கண்டுபிடித்ததற்காக இந்த கவுரவம் கிடைத்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிக்க டிரம்ப்-க்கு வாக்களியுங்க.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குழு
பாதிப்பு
சிலிகோ என்ற முறையின் மூலம் கொரோனா வைரஸ் செயல்லபாட்டை தடுக்கும் மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளார் அனிகா செப்ரோலு. கடந்த ஆண்டு இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் அனிகா செப்ரோலு. அந்த பாதிப்பின் அனுபவத்தால், இளம் விஞ்ஞானிகளுக்காக நடந்த போட்டியில் பங்கேற்க அனிகா முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவில் இன்ஃப்ளூயன்சா
அமெரிக்காவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் வருடந்தோறும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. நிறைய பேர் அந்த நாட்டில் பலியாகிறார்கள். எனவே இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க அனிகா விரும்பினார். இருப்பினும், இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவியதால், அவரது நோக்கம் கோவிட்-19 பற்றி மாறியுள்ளது.
வியப்பு
"தொற்றுநோய்கள், வைரஸ்கள் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு பற்றி ஆராய்ச்சி செய்தபோதுதான், நான் உண்மையில் இதுபோன்ற ஏதாவது ஒன்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து பார்த்து வியப்படைந்தேன்" என்று கூறுகிறார் அனிகா.
சிறு பங்களிப்பு
"கோவிட் -19 தொற்றுநோயின் தீவிரத்தன்மை மற்றும் இவ்வளவு குறுகிய காலத்தில் அது உலகில் ஏற்படுத்திய கடுமையான தாக்கத்தின் காரணமாக, எனது வழிகாட்டியின் உதவியுடன், கொரோனா வைரஸை அழிக்கும் இலக்குகளை மாற்றியமைத்துள்ளேன். எனது கண்டுபிடிப்பு, கடலில் விழுந்த ஒரு துளி போலத்தான் என்பதை உணர்ந்துள்ளேன். ஆனாலும், பலரது பங்களிப்பில் இதையும் ஒன்றாக கருதுகிறேன்" என்று, அவர் மேலும் கூறினார்.
அறிவியல் ஆர்வம்
"என் தாத்தா, நான் இளமையாக இருந்தபோதிலிருந்தே, என்னை அறிவியலை கற்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவர் ஒரு வேதியியல் பேராசிரியராக இருந்தார். இதுதான் எனக்கு அறிவியல் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. நான் SARS-CoV-2 வைரஸ் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டதால் கடந்த 2 நாட்களாக, மீடியா வெளிச்சம் அதிகமாக இருக்கிறது" என்கிறார் அனிகா செப்ரோலு பெருமிதத்துடன்.