அதை விடுங்க.. பைடன் உரையை ரெடி செய்தது யார்னு தெரியுமா?
வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனின் முதல் உரையை அமெரிக்க வாழ் இந்தியரான வினய் ரெட்டி தான் தயார் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர்கள் வரலாற்றிலேயே ஒரு அதிபரின் உரையை தயார் செய்யும் முதல் இந்தியரும் இவர் தான். அந்த வகையில் ரெட்டி சரித்திரம் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் பதவியேற்க உள்ளார்.
கமலாவின் வெற்றி
கமலா ஹாரீஸ், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவரது வெற்றி முதல் பதவியேற்பு வரை அனைத்தையும் உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களும், தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகையில் மற்றொரு இந்தியரும் முக்கிய அங்கம் வகிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியப் பூர்விகம்
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான வினய் ரெட்டி தான், ஜோ பைடனின் பதவியேற்பு உரையை தயார் செய்துள்ளார். இதற்கு முன் 2013-17 ம் ஆண்டுகளில் பைடன் துணை அதிபராக இருந்த போதும் அவரது உரையை தயார் செய்து கொடுத்தது வினய் தான்.
இன்று இரவு பதவியேற்பு
அமெரிக்க நேரப்படி பகல் 12 மணிக்கு, தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், ஜோ பைடனுக்கு பதவியேற்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பதவியேற்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்கள், அமெரிக்க மக்களுக்கு அதிபராக தனது முதல் உரையை பைடன் நிகழ்த்த உள்ளார்.
அதிபர் உரை
அமெரிக்காவின் ஒற்றுமையை மையக் கருத்தாகக் கொண்டு பைடன் உரையாற்ற உள்ளார். முந்தைய அதிபரான டிரம்ப் பிறப்பித்த, இஸ்லாமியர்கள் அமெரிக்கா பயணம் செய்வதற்கு தடை விதித்த உத்தரவை பைடன் முடிவுக்கு கொண்டு வரலாம். அமெரிக்கர்கள் சந்தித்து வரும் பல பிரச்சனைகள் பைடனின் முதல் உரையில் இடம்பெறலாம் என பல எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
ரெட்டிக்குக் கிடைத்த புகழ்
இதற்கிடையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அதிபர் உரையை தயாரிக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த எதிர்பார்ப்பு இந்தியர்களிடமும் அதிகரித்துள்ளது. ரெட்டியின் பூர்வீகம் தெலங்கானா மாநிலமாகும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் கணிசமான இடத்தில் தெலுங்கர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.