பிடன் vs டிரம்ப்.. அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஓட்டு யாருக்கு? வெளியான அசத்தல் சர்வே முடிவு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பாலான, அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஆதரவு டொனால்ட் ட்ரம்ப்புக்கா அல்லது ஜோ பிடனுக்கா என்ற சுவாரசிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
ட்ரம்ப்புக்கு ஆதரவான புளோரிடா பிரச்சாரத்தில்... மருந்து நிறுவனங்களை விளாசிய ஜோ பைடன்!!
இந்தியர்கள் ஆதரவு கட்சி
பொதுவாகவே, ஜனநாயக கட்சிக்குத்தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிகம் பேர் ஓட்டுப் போடுவது வழக்கம். ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் சமீப காலமாக நட்பு பாராட்டி வருவது இந்த போக்கை மாற்றுமா என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஹவுடி மோடி நிகழ்ச்சி
குறிப்பாக சுமார் ஐம்பதாயிரம் பேர் பங்கேற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியை அமெரிக்காவில், மோடியும், ட்ரம்பும் சேர்ந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம், நடத்தினர். அப்போது மீண்டும் ட்ரம்ப் அதிபராக வரவேண்டும் என்று வெளிப்படையாக பேசினார் மோடி. சில தினங்கள் முன்பு கூட ட்ரம்ப் தனது நண்பர் என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார் மோடி. இந்த நிலையில் வெளியாகியுள்ள சர்வே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கவாழ் இந்தியர்கள்
சர்வதேச அமைதிக்கான கார்னேஜ் என்டவ்மென்ட், ஜான் ஹாப்கின்ஸ்-எஸ்ஏஐஎஸ் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் இணைந்து செப்டம்பர் 1 முதல் 20ம் தேதி வரை ஒரு சர்வே நடத்தின. அப்போது அமெரிக்கவாழ் இந்தியர்கள் 936 பேரிடம், நீங்கள் யாருக்கு ஆதரவு தருவீர்கள் என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. இதில், 72 சதவீதம் அமெரிக்கவாழ் இந்தியர்கள், ஜோ பிடனுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இது அமெரிக்கவாழ் இந்தியர்கள் மனநிலையை பிரதிபலிக்கிறது. அமெரிக்காவை ட்ரம்ப் தவறான வழியில் வழிநடத்துவதாக வாக்களித்த பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
ஓட்டு முக்கியம்
அமெரிக்காவில் புலம் பெயர்ந்த நாட்டினர் என்ற அடிப்படையில், இந்தியர்கள்தான் மக்கள்தொகையில் 2வது இடத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் சுமார் 1 சதவீதம் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். எனவே இரு கட்சிகளும், புலம் பெயர் இந்தியர்களின் வாக்குகளை குறி வைக்கின்றன.
கமலா ஹாரிஸ்
முதல் முறையாக ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் பெரிய கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் என்றால் அந்த பெருமை கமலா ஹாரிசுக்குத்தான். இதுவும் இந்தியர்களின் மனதை வெல்ல ஜோ பிடனுக்கு உதவியுள்ளது. 49 சதவீதம் பேர் கமலா துணை அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளது தங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளனர். மொத்தத்தில் பெரும்பாலான வாக்காளர்கள், பொருளாதாரம் மற்றும் சுகாதார வசதிகளைத்தான் டாப் 2 தேவைகளாக இக் கணிப்பில் கூறியுள்ளனர்.
இந்தியர்கள் ஆதரவுக்கு காரணம்
மெட்ஃபோர்டில் எரிவாயு விநியோகிக்கும் நிறுவனத்தை வைத்திருக்கும் 72 வயதான இந்திய வம்சாவளிக்காரரான கபூர் இதுகுறித்து கூறுகையில், கமலா ஹாரிஸ் 2016ல் செனட் தேர்தலில் வெற்றி பெற உழைத்தோம். இந்திய-அமெரிக்கர்கள் பிடன் வெற்றிக்காக, 3.3 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளோம். செப்டம்பரில் அவர் ஏற்பாடு செய்த ஒரு நிதி திரட்டும் நிகழ்வில் இதை வழங்கியுள்ளோம். ஆனால் ஜோ பிடனை இந்திய-அமெரிக்கர்கள் ஆதரிப்பதற்கான காரணம் கமலா ஹாரிஸ் மட்டும் அல்ல. ட்ரம்ப்பின் பொருளாதாரக் கொள்கைகளினால் நாங்கள் ஆதாயம் பெற்றிருந்தாலும் கூட, பிற நாட்டிலிருந்து குடியேறியவர்கள் மற்றும் நிற பாகுபாடு காட்டும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். எனவே ஜனநாயக கட்சிக்குத்தான் எங்கள் ஆதரவு என்றார்.