வெறுப்பை வெல்லும் கோலம்.. பதவியேற்கும் விழாவில் பைடன், கமலா ஹாரிஸை கோலமிட்டு வரவேற்கும் இந்தியர்கள்!
வாஷிங்டன: பதவியேற்பு விழாவின்போது ஜோ பைடனையும் கமலா ஹாரிஸையும் கோலமிட்டு வரவேற்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் டிரம்பை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தோற்கடித்தார்.
அதேபோல அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கறுப்பினத்தவரான கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
அமெரிக்கக் கலவரம்
இருவரது வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இரு காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். உலகின் மிகப் பழமையான ஜனநாயகமான அமெரிக்காவின் கறுப்பு நாளாக வன்முறை நடைபெற்ற ஜனவரி 6ஆம் தேதி பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழா
பின்னர் ராணுவத்தின் உதவியுடன் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றியும் உறுதி செய்யப்பட்டது. இவரும் வரும் ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு தினத்தன்று வன்முறை வன்முறை ஏற்படுவதைத் தடுக்க, தலைநகர் வாஷிங்டனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
காயத்திற்கு மருந்து
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையின் காயத்திற்கு மருந்தாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின்போது நாடாளுமன்ற கட்டத்தின் முன் கோலமிட்டு இருவரையும் வரவேற்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோலமிட்டு வரவேற்பு
இது குறித்து இந்திய அமைப்பான இந்தியாஸ்போராஃபோரம் தனது ட்விட்டரில், "வரும் வியாழக்கிழமை ஜோ பைடனையும் கமலா ஹாரிசையும் வரவேற்க அமெரிக்க நாடாளுமன்ற கட்டத்தின் முன் ஆயிரக்கணக்கான கோலங்கள் போடப்படும்" என்று கூறியுள்ளது. மேலும், வன்முறையால் ஏற்பட்ட பிரிவினைவாதத்தை அழிக்கும் சக்தி கோலங்களுக்கு உண்டு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பதவி நீக்க மசோதா
முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு டிரம்பின் பொறுப்பற்ற பேச்சைக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், அவர் மீது பதவி நீக்க மசோதாவும் முன்மொழியப்பட்டது. இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. விரைவில் மேல் சபையிலும் விவாதிக்கப்படவுள்ளது. வரும்காலங்களிலும் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது குறித்தும் ஜனநாயகக் கட்சியினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.