யுஎஸ்ஸில் இந்திய பொறியாளரை சுட்ட கொள்ளையர்கள்… லிப்ட் கேட்டு காரில் ஏறி அட்டூழியம்
வாஷிங்டன்:அமெரிக்காவில் வழிப்பறி கொள்ளையர்களால் சுடப்பட்ட இந்திய பொறியாளர், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
தெலுங்கானாவை சேர்ந்த பொறியாளர் சாய்கிருஷ்ணா என்பவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3ம் தேதி, இரவு 11.30 மணியளவில் அவர் பணி முடிந்து தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி முனையில் பொறியாளர் சாய் கிருஷ்ணாவை சிலர் மறித்து கடத்தியுள்ளனர்.
பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி அவரிடம் இருந்த பணம், செல்போன் , கிரெடிட், டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றைப் பறித்துதோடு சாய்கிருஷ்ணாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு கீழே தள்ளிவிட்டு காருடன் தப்பிச் சென்றனர்.
சாலையில் துப்பாக்கி குண்டடி பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சாய் கிருஷ்ணாவை அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்து உடனே காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாய்கிருஷ்ணாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது சாய்கிருஷ்ணா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னரே சாய்கிருஷ்ணாவின் உடல்நிலை குறித்து கூறமுடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.