'நியூயார்க் டைம்ஸ்' முதல் பக்கம் முழுசா.. இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றி விளம்பரம்.. பரபர பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து வெளிவரக்கூடிய முன்னணி நாளிதழ் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் முதல் பக்கத்தில் இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றிய முழு பக்க விளம்பரம் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 மாதங்களாக போராடி வருகிறார்கள் விவசாயிகள்.
இதுவரை மத்திய அரசு அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்திய பிரச்சினை
இந்த நிலையில் தான் சர்வதேச பிரபலங்கள் ரிஹானா, கிரெட்டா தன்பெர்க், மியா கலிஃபா உள்ளிட்டோர் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இந்திய நாட்டு உள் விவகாரத்தில் பிற நாட்டினர் தலையிடக்கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நடிகர் நடிகைகள் சிலரும் டுவிட்டரில் கருத்து வெளியிட்டதால் இந்த பிரச்சினையை வேறு தளத்துக்கு சென்று விட்டது.
நியூயார்க் டைம்ஸ் முதல் பக்க விளம்பரம்
இந்த நிலையில்தான், அமெரிக்க முன்னணி நாளிதழ் நியூயார்க் டைம்ஸ்-சின் முதல் பக்கம் முழுக்க இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பான விளம்பரம் நேற்று வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க, புலம்பெயர்ந்த பெண்களுக்கான உரிமைகளுக்காக போராடக்கூடிய "ஜஸ்டிஸ் ஃபார் மைகிரைன்ட் வுமன்" என்ற குழு இந்த விளம்பரத்தை பத்திரிகையில் வெளியிட செய்துள்ளது.
|
மனித உரிமை குழு
அமெரிக்காவைச் சேர்ந்த மோனிகா ரமீரஸ் என்ற மக்கள் உரிமை ஆர்வலரால், இந்த இயக்கம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பரத்தின் கீழே மொத்தம் 75 மனித உரிமைக் குழுக்கள் கையெழுத்திட்டுள்ளன. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக தங்களது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவும் வெளியிட்டுள்ளனர்.
இனப்பாகுபாடு
இதற்கு முன்பாக மோனிகா அமெரிக்க விவசாயிகள் பிரச்சினையில் கவனம் செலுத்தியவர் ஆகும். இனப் பாகுபாடு காரணமாக ஊதியங்கள் வழங்குவதில் இருக்கக்கூடிய பாகுபாடுகளைக் களைய வேண்டும் என்று குரல் கொடுத்தது மோனிகா அமைப்பு. இப்போது முதல் முறையாக இந்திய விவசாயிகள் பிரச்சினையை ஒரு மிகப் பிரபலமான நாளிதழில் முதல் பக்கத்தில் விளம்பரமாக வெளியிட செய்துள்ளார்.
விளம்பர தலைப்பு
இந்த முதல் பக்க விளம்பரத்தின் தலைப்பு இப்படி தொடங்குகிறது "நாங்கள்- விவசாயிகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் உலகின் குடிமக்கள் இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு பக்கத்துணையாக இருக்கிறோம், அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விளம்பரத்தில், "மோடி அரசு மிகவும் துரித கதியில் மூன்று விவசாய சட்டங்களை நிறைவேற்றி விட்டது. போதிய ஆய்வுகள் செய்யப்படாமல், சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மனித உரிமை
சுமார், 10 லட்சம் விவசாயிகள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், இந்திய அரசு அவர்கள்மீது வன்முறையை கையாளுகிறது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுகிறது, தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, மொத்தமாக கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதுபோன்ற மனித உரிமைகளுக்கு எதிரான செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இது வாழ்வா சாவா என்ற பிரச்சினை. எனவே, அவர்கள் போராடுகிறார்கள். அவர்களிடம், மனித உரிமைக்கு எதிராக அடக்குமுறைகள் செய்வது சரி கிடையாது" என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விளம்பரத்தில் கையெழுத்திட்டுள்ள 75 குழுக்களில், திரை இயக்குனரும், இந்திய வம்சாவளி ஆர்வலருமான, வலேரி கவுர் ஒருவர். அமெரிக்காவை சேர்ந்த மூன்றாம் தலைமுறை சீக்கியர் இவர். அவரது குடும்பம் 1913 இல் நாட்டில் விவசாயிகளாக அமெரிக்காவில் குடியேறியது. என்பது குறிப்பிடத்த்ககது.