அடைக்கலம் தேடிச் சென்ற போது பரிதாபம்.. தண்ணீர் கிடைக்காமல் அமெரிக்க எல்லையில் இந்திய சிறுமி பலி!
அமெரிக்காவில் அடைக்கலம் தேடிச் சென்ற இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் அடைக்கலம் தேடிச் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி தாகத்தால் நாவறண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள், ஹாஸ்டல்கள் இழுத்து மூடப்பட்டு வருவது நாமறிந்த உண்மை தான். தண்ணீர் திருட்டு, தண்ணீருக்காக கொலை என பல அதிர்ச்சிகரமான செய்திகளை தினமும் நாம் படித்து வருகிறோம்.
இந்நிலையில், இந்தியச் சிறுமி ஒருவர், கொளுத்தும் வெயிலில் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் அமெரிக்கா அருகே உயிரிழந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அமெரிக்காவில் அடைக்கலம் தேடி பல்லாயிரக்கணக்கானோர் அந்நாட்டின் எல்லைப் பகுதிக்கு வருகின்றனர். இப்படி வருபவர்களில் பெரும்பாலானோர் இடைத்தரகர்கள் மூலம் வருபவர்கள் ஆவர்.
அவர்களை மெக்சிகோ நாட்டு எல்லைப் பகுதியில் பாலைவனத்தில் இறக்கி விட்டு விடுகின்றனர் இடைத்தரகர்கள். அங்கிருந்து அமெரிக்க எல்லைக்குள் நுழைவது சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியம்.
அந்தவகையில், இந்தியாவை சேர்ந்த ஒரு தாயும் அவரது 6 வயது மகளும் இடைத்தரகர்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப்பகுதியை வந்தடைந்தனர். அங்கு 108 டிகிரி வெயிலில் சுற்றித் திரிந்த அவர்களுக்கு கடும் தாகம் ஏற்பட்டுள்ளது.
மகளை ஒரு இடத்தில் இருக்க வைத்து விட்டு, மற்றொரு பெண்ணுடன் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார் அத்தாய். ஆனால், கடும் நாவறட்சி ஏற்பட்டதில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே, அவர்கள் இருந்த இடத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்தனர் அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள். சிறுமியின் மரணத்துக்கு ஆள்கடத்தல் ஏஜெண்ட்டுகள் தான் காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.