அமெரிக்க அதிபர் தேர்தல் ரிசல்ட் என்னவாகும்? மாற்றங்கள் வருமா.. உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்
வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் முடிவுகளை உலக நாடுகள் பலவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் அதிபராக போவது டொனால்ட் ட்ரம்ப்பா அல்லது ஜோ பிடன் அந்த பதவிக்கு வருவாரா என்பதில், உலகின் பல நாடுகளுக்கு அக்கறை இருக்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி வகித்த போது, வெளியுறவுக் கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து கூட அமெரிக்காவை விலகச் செய்தார்.
எனவேதான் ஈரான் முதல் கியூபா வரை, சீனா முதல் இஸ்ரேல் வரை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வெடித்தது இன்னொரு குழப்பம்.. தப்பு தப்பா தகவல் பரப்பறாங்க.. கன்னத்தில் கை வைக்கும் அமெரிக்கர்கள்!
எதிர்பார்ப்பு
சில நாடுகளுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ததாக அமெரிக்கா அறிவித்தது ட்ரம்ப் காலத்தில் சகஜமானது. ஈரானுடான அணு ஒப்பந்தம், பொருளாதார தடை என ட்ரம்ப் பல அதிரடிகளைச் செய்தார். அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகளின் ஸ்டேட்டஸ்களில் மாற்றங்களை கொண்டு வந்தார். அரபு நாடுகள் சிலவற்றை இஸ்ரேலுடன் கை குலுக்க வைப்பதில் வெற்றி பெற்றார். எனவேதான் அத்தனை நாடுகளும் அமெரிக்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள்
அமெரிக்கர்களுக்குத்தான் முதல் உரிமை என்று டொனால்டு டிரம்ப் முன் வைக்கும் கோஷத்தை, சர்வதேச நாடுகள், விமர்சனம் செய்து வரும்போதிலும் கொரோனா வைரஸ் நோய் பரவல் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் மெத்தனமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள போதிலும், ஜோ பிடன் வந்தால் நிலைமை மாறுமா என்பது கேள்விக்குறிதான்.
அமெரிக்கர்களுக்கு முதல் உரிமை
பராக் ஒபாமா அதிபராக பதவி வகித்த போது துணை அதிபராக பதவி வகித்தவர் தான் ஜோ பிடன். அப்போதும் அமெரிக்க நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் எதுவும் கிடையாது. அமெரிக்கர்களுக்கு முதல் உரிமை தரப்பட்டது. இந்தியாவை பொருத்தளவில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பிடன் எடுப்பாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
ஈரானுடன் மோதல்
2020ம் ஆண்டு துவக்கத்தில், அதாவது கொரோனா நோய்த்தொற்று துவங்குவதற்கு முன்பான காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்படுமா என்பது தான் சர்வதேச அளவில் பெரிதாக பேசப்பட்டு வந்தது. எனவே டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்றால் மறுபடியும் ஈரானுடனான மோதல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு கணக்கு இருப்பதால் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல்.