ஈரான் விஞ்ஞானி படுகொலை... இஸ்ரேல்தான் காரணம்... காட்டிக் கொடுத்த அமெரிக்கா!
வாஷிங்டன்: ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். விஞ்ஞானியின் படுகொலை ஈரானுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்றும், இதற்கு பழிவாங்கியே தீருவோம் எனவும் ஈரான் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா முதல் முறையாக வாய் திறந்துள்ளது.
இந்த படுகொலைக்கு பின்னால் இஸ்ரேல் இருப்பதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் இந்த தாக்குதலை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படுகொலை
ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானியான மொஹ்சென் பக்ரிசாதே சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். தலைநகர் தெஹ்ரான் அருகே, காரில் சென்றபோது மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அவரது காரை துப்பாக்கி ஏந்திய 5 நபர்கள் வழிமறித்து மொஹ்சென் பக்ரிசாதேவை சரமாரியாக சுட்டனர்.
அணு குண்டின் தந்தை
இதில் குண்டு பாய்ந்த மொஹ்சென் பக்ரிசாதே பரிதாபமாக உயிரிழந்தார். ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் சூத்திரதாரி என்று மொஹ்சென் பக்ரிசாதேவை மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் அழைத்து வந்தன. "ஈரான் அணு குண்டின் தந்தை" என்றும் அவர் அழைக்கப்பட்டு வந்தார்.
பழிவாங்குவோம்
தங்கள் நாட்டு விஞ்ஞானி கொலைக்கு இஸ்ரேல்தான் காரணம் என்றும் இதற்கு பழிவாங்கியே தீருவோம் என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ள அமெரிக்கா, ஈரான் விஞ்ஞானி கொலையில் இஸ்ரேல் பின்புலமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்தான் காரணம்
இது குறித்து அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஈரான் விஞ்ஞானி கொலையில் பின்புலமாக இஸ்ரேல் இருக்கலாம். ஏனெனில் மொஹ்சென் பக்ரிசாதே நீண்ட காலமாக இஸ்ரேலியர்களுக்கு இலக்காக இருந்தார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஆதாரம் அளிக்கவில்லை
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய தொடர்பு உள்ளதாக ஈரான் எந்த ஆதாரமும் அளிக்கவில்லை. ஆனாலும் மொஹ்சென் பக்ரிசாதே மரணத்தை இஸ்ரேல் மறுக்கவில்லை. பொறுப்பு ஏற்கவும் இல்லை. கடந்த காலங்களில், இஸ்ரேலியர்கள் தங்கள் இலக்குகள் மற்றும் இரகசிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவிடம் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர், ஆனால் அவற்றைச் செய்வதற்கு முன்பு அவர்கள் அவ்வாறு செய்தார்களா என்று கூறமாட்டார்கள்.
தடைகள் இருக்கும்
இந்த படுகொலைக்கு ஈரான் இஸ்ரேலைக் குற்றம் சாட்டுவதால், அங்குள்ள பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த வாரம் மற்றும் அடுத்த வாரங்களில் ஈரான் மீது மேலும் அமெரிக்க பொருளாதார தடைகள் இருக்கும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
டிரம்புக்கு தெரியுமா
ஆனால் இந்த தாக்குதல் குறித்து முன்னரே டிரம்ப் நிர்வாகத்திற்குத் தெரியுமா? இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு அவர் பதில் கூற மறுத்து விட்டார்.